கோதாவரி ஆற்றில் மீண்டும் விபத்து... 20 பேர் கொண்ட குடும்பம் உள்பட 40 பேர் கதி என்ன!
ஆந்திராவின் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த 40 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது.
ஹைதராபாத்: ஆந்திராவில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கோதாவரி ஆற்றில் சென்ற படகு கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த 20 பேர் கொண்ட குடும்பம் உள்பட, 40 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. அவர்களை தேடும்பணி நடந்து வருகிறது.
கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பாப்பிகொண்டலு என்ற சுற்றுலா தளத்துக்கு, ஒரு தனியார் படகில் 90 பேர் கடந்த வாரம் சென்றனர். அப்போது படகு திடீரென்று தீப்பற்றியது. ஆனால், அதிர்ஷ்டவசமாக படகில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கொண்டமோடுலு என்ற மலைகிராமத்தில் இருந்து ராஜமுந்திரிக்கு, ஒரு தனியார் படகில் இன்று 50 பேர் பயணம் மேற்கொண்டனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் திருமணத்துக்காக சென்றனர். படகில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் மலைவாழ் மக்கள்.
மாலையில் தேவிபட்டினம் அருகில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பலத்த காற்று வீசியது. இதில் தட்டுத்தடுமாறிய படகு, திடீரென ஆற்றில் கவிழ்ந்ததது. படகில் இருந்த 10 பேர் நீச்சல் அடித்து அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்றனர். ஆனால், 40 பேர் நிலைமை என்னவென்று தெரியவில்லை. அவர்கள் மீட்க கிராம மக்கள் உடனடி நடவடிக்கை எடுத்தனர்.
தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் உடனடியாக வரவழைக்கப்பட்டனர். ஆற்றில் மூழ்கியவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி, மாவட்ட நிர்வாகத்துக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.