வள்ளியூரில் விவசாயியிடம் ரூ.40 லட்சம் பணமோசடி - கரூர் வைஸ்யா வங்கி மேலாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு
விவசாயியின் வங்கி பணத்தை மோசடி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வள்ளியூர்: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் விவசாயியின் வங்கிக் கணக்கில் இருந்து 40 லட்ச ரூபாயை மோசடி செய்ததாகக் கரூர் வைஸ்யா வங்கி மேலாளர் உட்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நாங்குநேரி அருகே நல்லான்குளத்தை சேர்ந்தவர் விவசாயி கணேசன். இவருக்கு வள்ளியூர் சாமியார் பொத்தை அருகில் 2 புள்ளி மூன்று ஏழு ஏக்கர் விவசாய நிலம் இருந்தது. கடன் காரணமாக தனது இடத்தை விற்பனை செய்ய முடிவு செய்து, முத்து கிருஷ்ணா ட்ரஸ்டிற்கு 1 கோடியே 74 லட்சம் ரூபாய்க்கு நிலத்தை விற்பனை செய்தார்.
4 வரைவோலைகளாகக் கணேசனிடம் முத்துக்கிருஷ்ணா டிரஸ்ட் நிர்வாகத்தினர் கொடுத்துள்ளனர். 3 வரைவோலைகளை இந்தியன் வங்கியில் உள்ள தனது கணக்கில் கணேசன் செலுத்தியுள்ளார். ஒரு வரைவோலையை வள்ளியூர் கரூர் வைஸ்யா வங்கியில் கணக்குத் தொடங்கி அதில் போடலாம் என நிலத் தரகர்களான வைகுண்டதாசும், ராஜேசும் கூறியுள்ளனர்.
வங்கி மேலாளர் முத்துசாமி பல்வேறு படிவங்களில் கணேசனிடம் கையெழுத்து வாங்கியதாகக் கூறப்படுகிறது. 2 நாட்களுக்குப் பின் வரைவோலைப் பணம் கணக்கில் உள்ளதா எனக் கணேசன் பார்த்தபோது சுமார் 40லட்சம் ரூபாயைக் கணக்கிலிருந்து எடுத்திருப்பது தெரிந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த கணேசன், மீதி பணம் பற்றி வங்கி மேலாளரிடம் கேட்டதற்கு வைகுண்டதாசிற்கு 8 லட்சம் ரூபாய், ராஜேஷுக்கு 7 லட்சம் ரூபாய் என பண பரிவர்த்தனை செய்யப்பட்டதாக கூறியுள்ளார். இந்த பண மோசடி குறித்து விவசாயி கணேசன் வள்ளியூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், வங்கி மேலாளர் முத்துசாமி உட்பட 4 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.