ஆரம்பிச்சிட்டாங்க.. தேர்தல் பறக்கும் படையிடம் ரூ.40 லட்சத்துடன் சிக்கிய அதிமுக பிரமுகர்
திருப்பரங்குன்றம் தொகுதியில் 40 லட்சம் ரூபாயை காரில் எடுத்துச் சென்ற அதிமுக பிரமுகர் தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கினார்.
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சட்டபேரவைத் தொகுதியில் வரும் 19ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அத்தொகுதியின் எல்லைகளில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட 40 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இந்த 3 தொகுதிகளிலும் எல்லைப் பகுதியில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் தேர்தல் பறக்கும் படை ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று காலை தேனியில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில் செல்லும் கார்களை தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது, மாடக்குளம் என்ற இடத்தில் வந்த ஒரு காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அந்த காரில் 40 லட்சம் ரூபாய் ரொக்கத்தோடு வந்தவர் பிடிபட்டார். அவர் யார் என்று பறக்கும் படையினர் விசாரித்த வோது, அதிமுக பிரமுகர் நாராயணசாமி என்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா புகார் எழுந்ததையடுத்து, கடந்த மே 16ம் தேதி நடைபெறவிருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வரும் 19ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபெற உள்ள இந்தத் தேர்தலிலாவது பணப்பட்டுவாடா புகார் எழாத வகையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.