ஆந்திராவில் கல் உடைக்கப் போன 40 தமிழக தொழிலாளர்களின் கதி என்ன?
சேலம்: ஆந்திராவிற்கு கல் உடைக்கப் போன 40 தமிழக தொழிலாளர்களின் கதி என்னவானது என்பது தெரியாத காரணத்தால் அவர்களின் உறவினர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை 46 தொழிலாளர்கள் ஆந்திராவுக்கு கல் உடைக்கும் வேலைக்குச் சென்றுள்ளனர்.
இந்த தொழிலாளர்கள் மீது ஆந்திர போலீஸ் சுட்டதில் வாழப்பாடியைச் சேர்ந்த ஒருவர் வயிற்றில் குண்டு பாய்ந்தது. 4 தொழிலாளர்களை ஆந்திர போலீஸ் கடப்பா சிறையில் அடைத்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர போலீசிடம் இருந்து ஒரு தொழிலாளி தப்பி சொந்த ஊருக்கு வந்தடைந்தனர். மீதமுள்ள 40 தொழிலாளர்களின் கதி என்ன என்று தெரியாததால் குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர்.
செய்தியாளர்களிடம் பேசிய தப்பி வந்த தொழிலாளி, ஆந்திரா போலீசார் தமிழர்கள் மீது குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்துவதாகவும் அவர்களிடம் இருந்து உயிர் தப்பி வந்தது என்னுடைய மறுஜென்மம் என்று தெரிவித்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னர் 20 தமிழக தொழிலாளர்கள் ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமே தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 40 தொழிலாளர்கள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.