போலி சான்றிதழ் மூலம் அரசு பணி - 407 பேரை வீட்டுக்கு அனுப்ப அரசு ஆயத்தம்
நெல்லை: மாற்று திறனாளி என போலி சான்றிதழ் கொடுத்து வேலை வாய்ப்பு பெற்ற மேலும் 407 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட உள்ளனர்.
தமிழகம் முழுவதும் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள அலுவலகங்களில் கடந்த 2011 ஆம் ஆண்டு அலுவலக உதவியாளர் பணி முதல் ஆய்வாளர் பணி வரை வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்பட்டனர்.
இவர்களில் பலர் போலி மாற்று திறனாளி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், இனசுழற்சி ஆகியவற்றில் முறைகேடு செய்து பணியில் சேர்ந்ததாக புகார் எழுந்தது. நெல்லை மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது தெரிய வந்தது. இதையடுத்து மாற்று திறனாளிகள் சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்தவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் குழு முன்னிலையில் ஆஜராகி மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த சோதனையில் 108 பேர் போலி என தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் அரசு பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு மூப்பு, முன்னுரிமை அடிப்படையில் நகராட்சி, பேரூராட்சிகளில் 400க்கும் மேற்பட்டவர்கள் வேலைக்கு சேர்ந்தது தெரிய வந்தது. இதையடுத்து லஞ்ச ஓழிப்பு துறையினர் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் உள்ளாட்சி பணிக்கான நேர்முக தேர்வில் கலந்து கொண்ட 2 ஆயிரம் பேரின் சான்றிதழ்கள், பதிவுமூப்பு, முன்னுரிமை, வேலைவாய்ப்பு அலுவலக அட்டை ஆகியவற்றை சோதனை செய்தனர்.
இதில் 515 பேர் முறைகேடாக வேலைக்கு சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் லஞ்சம் கொடுத்து வேலையில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இவர்களில் 407 பேர் விரைவில் சஸ்பெண்ட் செய்யப்பட இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இதனால் பலர் பயத்தில் உள்ளனர்.