ரூ.1 லட்சம் கடனை அடைப்பதாக கூறி ஏமாற்றி 16 வயது சிறுமியை திருமணம் செய்த 41 வயது நபர் கைது!
தஞ்சையை சேர்ந்த 16 வயது சிறுமியை குடும்பத்தின் கடனை அடைப்பதாக கூறி இரண்டவது திருமணம் செய்து கொண்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்: குடும்பத்தின் ஒரு லட்சம் ரூபாய் கடனை அடைப்பதாக கூறி 41 வயது நபர் ஒருவர் தஞ்சையை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டார். சிறுமியை திருமணம் செய்த அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகர்கோவில் அருகே உள்ள பள்ளம்துறையை சேர்ந்த ராபர்ட் பெல்லார்மின் என்ற நபர் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் 2-வது திருமணம் செய்ய பெண் தேடினார் பெல்லார்மின். குமரி மாவட்டத்தில் பெண் கிடைக்காததால் தனது நண்பர் மூலம் வேறு ஊரில் பெண் தேடினார்.
ரூ.1 லட்சம் கடனை அடைக்கிறேன்
அப்போது தஞ்சாவூரை சேர்ந்த ஒரு குடும்பத்தின் ரூ.1 லட்சம் கடனை அடைத்தால், அந்த குடும்பத்தின் மூத்த மகளான 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நிபந்தனையுடன் ராபர்ட் பெல்லார்மினுக்கு தகவல் வந்தது. அதன்படி ரூ.1 லட்சம் தருவதாக கூறி அந்த சிறுமியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.
ரகசியமாக குடித்தனம்
சிறுமியை பள்ளம்துறைக்கு அழைத்து வந்தபோது முதல் மனைவிக்கு விஷயம் தெரிந்து தகராறு செய்தார். இதனால் யாருக்கும் தெரியாமல் நாகர்கோவில் குருசடி பகுதியில் வாடகை வீடு எடுத்து சிறுமியுடன் அவர் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்தார்.
சிறை வைக்கப்பட்ட சிறுமீ மீட்பு
சிறுமியை திருமணம் செய்த விவகாரம் யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக அவரை வெளியே விடாமல் வீட்டுக்குள்ளேயே சிறைவைத்திருந்தார் பெல்லார்மின். இருப்பினும் இந்த தகவல் எப்படியோ கசிந்ததில் 2 நாட்களுக்கு முன்பு சிறுமியை போலீசார் மீட்டனர்.
கடனை அடைக்கவில்லை
இதுகுறித்து சிறுமியின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது தாயார் நாகர்கோவில் காவல்நிலையத்திற்கு வந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு லட்சம் கடனை அடைப்பதாக கூறி தனது மகளை திருமணம் செய்து கொண்டு பணம் தராமல் பெல்லார்மின் ஏமாற்றியதாக அவர் குற்றம்சாட்டினார்.
பெல்லார்மின் கைது
இதையடுத்து மீட்கப்பட்ட சிறுமி குழந்தைகள் நல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தலைமறைவாக இருந்த பெல்லார்மின் வெளியூருக்கு தப்பிச்செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.