அறிவு பசிக்கு சரியான வேட்டை.. சென்னையில் தொடங்கியது 41வது புத்தக கண்காட்சி
41வது சென்னை புத்தக கண்காட்சியை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கிவைத்தார்
சென்னை: சென்னை அமைந்தகரையில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் 41வது புத்தகக் கண்காட்சியை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
புத்தக விரும்பிகளின் திருவிழாவாக கருதப்படும் இந்த புத்தகக் கண்காட்சி ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தின் ஒரு அங்கமாக கருதப்படுகிறது. அனைத்து தரப்பினரையும் புத்தகக் கண்காட்சிக்கு ஈர்க்கும் வகையில் இந்த முறை பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
41வது புத்தகக் கண்காட்சியை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்துவைத்தார். நவீன முறையில் உருவாக்கப்பட்டுள்ள ரோபட் உதவியுடன் அவர் இந்த கண்காட்சியை அவர் திறந்துவைத்தார். இதனைத்தொடர்ந்து அவர் அரங்குகளை சுற்றிப்பார்த்தார். குழந்தைகளை கவரும் வகையில் இந்த வருடம் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வருடம் மொத்தம் 708 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 340 பதிப்பாளர்கள் கலந்து கொள்ளவுள்ள நிலையில் 10 லட்சம் புத்தகங்கள் விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் புதிய சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் மாவட்டங்களில் 12 வயதிற்க்குட்பட்ட பள்ளிக் குழந்தைகள் 5 லட்சம் பேருக்கு புத்தக கண்காட்சிக்கு இலவச நுழைவு சீட்டு வழடங்கப்பட்டுள்ளது. இந்த குழந்தைகளுடன் பெற்றோர்களுக்கும் அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கண்காட்சியில் அனைத்து புத்தகங்களுக்கும் 10சதவீத கழிவு விலையில் விற்கப்படவுள்ளன.
இந்த முறை எழுத்தாளர்கள் பற்றிய ஆவண படங்கள் மற்றும் குறும்படங்களும் திரையிடப்படவுள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.