சோகத்தில் தொடங்கி உற்சாகத்தில் களைகட்டிய அதிமுகவின் 43வது பிறந்தநாள்
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்து கொண்டிருந்தபோது காலையில் களையிழந்த அ.தி.மு.க ஆண்டு விழா, நண்பகல் ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கட்சியினர் கொண்டாடியதால் களைகட்டியது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா இருக்கும் நிலையில், அக்கட்சியின் 43வது ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
43வது பிறந்தநாள்
காலை 9.30 மணிக்கு தலைமை அலுவலக வளாகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு அவைத் தலைவர் மதுசூதனன் மாலை அணிவித்தார். பின்னர் கட்சியின் கொடியை ஏற்றிய அவர், ஆண்டு விழா மலரை வெளியிட்டார். இதனை அமைச்சர் டாக்டர் விஜய பாஸ்கர் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
சோகத்தில் அதிமுகவினர்
கடந்த ஆண்டு ஆட்டம், பாட்டம், பட்டாசு, இனிப்பு, கச்சேரி என இருந்த அ.தி.மு.க ஆண்டு விழா இந்தாண்டு, ஜெயலலிதா சிறையில் இருந்ததால் களையிழந்து காணப்பட்டது.
பட்டாசுகள், இனிப்புகள்
காலையில் களையிழந்து காணப்பட்ட கட்சி அலுவலகம், நண்பகலில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து, அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடியதால், களைகட்டியது.
குத்தாட்டம்
அதேபோன்று போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டின் முன் குவிந்த அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என அசத்தினர். இதேபோல் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.
நாடுமுழுவதும் உற்சாகம்
தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் இன்று ஆங்காங்கே கட்சிக் கொடியினை ஏற்றி வைத்து அதிமுகவின் 43 வது ஆண்டு தொடக்கவிழாவை எளிமையாக கொண்டாடினர். பின்னர் ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைத்ததை அடுத்து பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
களை கட்டிய கொண்டாட்டம்
ஆண்டுதோறும் அதிமுகவின் தொடக்கவிழாவின் போது பட்டாசுகள் வெடிக்கப்படும். தலைமைச் செயலகத்தில் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்படும். அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து விழா சிறப்பு மலரை வெளியிடுவார். இந்த ஆண்டு அவர் சிறையில் இருப்பதால் மிகவும் அமைதியாக எளிமையான முறையில் அதிமுகவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து கொண்டாட்டம் களைகட்டியது.