குளுகுளு ஏற்காடு.. கவி நயத்துடன் கொண்டை ஊசி வளைவுகள்.. நாளை 43வது கோடை விழா!
ஏற்காட்டில் நாளை கோடைவிழா துவங்குவதை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகிறது.
Recommended Video
சேலம்: சேலம் ஏற்காட்டில் 43வது கோடைவிழா, மலர்கண்காட்சி நாளை தொடங்குகிறது. இதற்கான பணிகளில் மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடைவிழா நடப்பது வழக்கம். அதன்படி, 43-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை முதல் 5 நாட்கள் நடைபெறுகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோடை விழாவை தொடங்கி வைக்கிறார். இதில் தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர்.
விழாவினையொட்டி தோட்டக்கலைத்துறை சார்பில், அண்ணா பூங்காவில் 20 வகை பூக்கள் கொண்ட 10ஆயிரத்துக்கும் அதிகமான பூந்தொட்டிகளை கொண்டு மலர் கண்காட்சி திடல் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சால்வியா, மேரிகோல்டு, வின்கா, ஜினியா, உள்ளிட்ட 20 வகை பூக்கள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதற்காக 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்களை கொண்டு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பார்வையாளர்களை கவரும் வண்ணம் கார்நேசன் மலர்களால், அரசு தலைமை செயலகம், சேலம் விமானம் நிலையம் போன்றவற்றின் மலர் அலங்கார வடிவமைப்புகள் செய்யப்பட்டுள்ளன. காய்கறி கண்காட்சி, பழக்கண்காட்சியும் அமைக்கப்படவுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் நாய் கண்காட்சி, சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலா பயணிகளுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் படகு போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
அதேபோல, முதல்முறையாக ஏற்காட்டிலுள்ள 20 கொண்டை ஊசி வளைவுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவுகளுக்கும், தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன், வ.உ.சிதம்பரனார், வேலு நாச்சியார், வள்ளல் பாரி, வல்வில் ஓரி, சேரன் செங்குட்டுவன், பாரதியார், திருவள்ளுவர், உள்ளிட்ட தமிழ் வளர்த்த புலவர்கள், விடுதலை வீரர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது ஒட்டுமொத்த மக்களையும் ஈர்க்கும் என்பது நிச்சயம்.
சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதும் என்பதால் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மலைப்பாதையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளைய தினம் முதலமைச்சர் விழாவில் பங்கேற்க இருப்பதால் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.