ஏமனில் இருந்து இந்தியா திரும்பியவர்களுக்கு ஏர்போர்ட்டில் பணம் கொடுத்த 'வள்ளல்கள்'!
சென்னை: 7 பெண்கள், இரு குழந்தைகள் உட்பட 46 தமிழர்கள், கலவரம் பாதிக்கப்பட்ட ஏமனில் இருந்து பத்திரமாக சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.
இதனிடையே மும்பை விமான நிலையத்திற்கு வந்த பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, சிலர் பணம் கொடுத்து ஆறுதல் கூறினர்.
ஏமன் நாட்டில் உள்நாட்டு கலவரம் வெடித்துள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்கள் தாயகம் திரும்புமாறு இந்தியா அறிவுறுத்தியது. இதையடுத்து, நாடு திரும்ப விரும்பியவர்களை அழைத்துவர இந்திய பாதுகாப்பு படை சிறப்பு விமானங்களை இயக்கியது.
இதேபோல, 334 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு 2 விமானப்படை விமானங்கள் நேற்று இரவு மும்பை விமான நிலையம் வந்திறக்கப்பட்டனர். அதில் 46 தமிழர்களும் இருந்தனர். அவர்கள், தனியார் விமானங்கள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய 46 பேரின் உறவினர்களும், கண்ணீர்மல்க அவர்களை வரவேற்றனர். இதில் 7 பெண்கள் மற்றும் இரு குழந்தைகளும் இருந்தனர்.
பெரும்பாலானோர் மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களாகும். அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழக அரசு வாகன வசதிகளை செய்து கொடுத்துள்ளது.
ஏமனில் இருந்து சென்னை திரும்பிய சோமசுந்தரம் என்பவர் கூறுகையில், "இந்திய அரசும், தமிழக அரசும், நாங்கள் பத்திரமாக திரும்ப உரிய நடவடிக்கைகளை எடுத்தனர். இந்திய பாதுகாப்பு படை விமானங்களில் நாங்கள் மும்பை அழைத்துவரப்பட்டோம். பாதுகாப்பு படை அதிகாரிகள் எங்களை மிகவும் அன்போடு உபசரித்தனர். இதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.
இருப்பினும், வேலையில்லாமல் வருமானம் பாதிக்கப்படும் என்ற கவலை ஏமனில் இருந்து திரும்பியவர்களுக்கு உள்ளது. கடன் வாங்கி வெளிநாடு சென்ற அவர்கள், அந்த கடனையும் அடைக்க வழியில்லாமல் கஸ்டப்பட வேண்டுமே என்ற பயத்தில் உள்ளனர். இந்நிலையில், நேற்றிரவு மும்பைக்கு விமானம் வந்தடைந்தபோது, சில சக பயணிகள், அவர்களுக்கு பணத்தை எடுத்து கொடுத்தனர். சில ஆயிரங்களை செலவுக்காக அவர்கள் கொடுத்ததை பார்க்க முடிந்தது.