திமுக ஆட்சிக்கு வருவதை தடுப்போருக்கு வாக்களியுங்கள்... 'சோ' பேச்சு
சென்னை: ஓட்டுக்களை சிதற விடக்கூடாது திமுக ஆட்சிக்கு வருவதை தடுப்போருக்கு வாக்கு அளிக்க வேண்டும் என துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி தெரிவித்துள்ளார்.
துக்ளக் இதழின் 46-வது ஆண்டு நிறைவு விழா சென்னையில் நடைபெற்றது. உடல் நலம் குன்றிய நிலையிலும் சோ ராமசாமி இதில் கலந்து கொண்டு உரையாற்றினார். விழாவில் அவர் பேசியது: வெள்ள நிவாரணத்தில் தமிழக அரசு ஆரம்பத்தில் தடுமாறினாலும் பின்னர் சிறப்பாக செயல்பட்டது. அதிமுக ஆட்சியில் குறைகள் இருந்தாலும் நிறைய நிறைகள் இருக்கின்றன. மாநில உரிமைக்காக அதிகமாக இந்த அரசு போராடுவதாக புகழாரம் சூட்டினார்.
மேலும் குடும்ப ஆட்சி முறை மீண்டும் வராமலிருக்க நமது வாக்கை பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட சோ ராமசாமி, திமுக ஆட்சிக்கு வருவதை யாரோல் தடுக்க முடியுமோ அவர்களுக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.
விஜயகாந்த் வாக்குகளை பிரிப்பவராக உள்ளார் என்றும் தனது வாக்கு வங்கியை சரியாமல் வைத்திருப்பதே விஜயகாந்தின் சாதனை தான் என்றும் அவர் குறிப்பிட்டார். முதல்வர் போட்டிக்கு கருணாநிதி, ஸ்டாலின் இடையே போட்டி நிலவுவதாகவும் சோ ராமசாமி விமர்சித்தார்.
அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இவ்விழாவில் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது தலைவர்கள் தங்களுக்குள் பகிரங்கமாக கருத்து மோதல்களில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
சரத்குமார்:
துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் பேசிய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இளைஞர்கள் அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும். தமிழகத்தில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்டபோது இளைஞர்களின் பங்கு முக்கியமானது
இளங்கோவன்:
அவருக்கு பின்னர் பேசிய இளங்கோவன் இளைஞர்களை அரசியலுக்கு அழைப்பது தவறு. அவர்கள் நன்றாக படித்து நாட்டை வளப்படுத்த வேண்டும். நல்ல விஞ்ஞானியாக வர வேண்டும் அவர்கள் குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் . இளைஞர்களால் முடியும் என்றால் முடியும். பணம் சம்பாதிக்கும் எண்ணத்தில் இளைஞர்கள் அரசியலுக்கு வர கூடாது என்றார்.
அன்புமணி:
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மது ஒழிப்பை கொண்டு வருவோம் என இளைஞர்கள் நம்புவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். அனைவருக்கும் சீரான கல்வியை தருவோம் என கூறினார். அதற்கு பதிலளித்து பேசிய சோ ராமசாமி தமிழகத்தில் மது விலக்கு சாத்தியமில்லை எனக் குறிப்பிட்டார்.
பொன்.ராதாகிருஷ்ணன்
இலங்கை தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டவர் மோடி. குஜராத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுபோல் தமிழகத்தில் மாற்றம் வரும். 1967 ஆம் ஆண்டு தேர்தலில் செய்த தவறை போல் தற்போது செய்ய வேண்டாம் என்றார்.
பழ.கருப்பையா:
அதிமுகவைச் சேர்ந்த எம்எல்ஏ பழ கருப்பையா, சமுதாயத்தை மாற்றியமைக்காமல் அரசியலை மாற்றி அமைக்க முடியாது. பணம் கொடுத்துதான் அரசியல் கட்சிகள் கூட்டத்திற்கு ஆட்களை கூட்டி வருவதாக தெரிவித்தார். மேலும் காமராஜரின் பின்னால் இருந்தவர்கள் குஷ்பு, நக்மா பின்னால் இருப்பதாக இளங்கோவன் முன்னிலையிலேயே விமர்சித்தார்.