வங்கி ஊழியர்களின் 48 மணிநேர ஸ்டிரைக் துவங்கியது: ஏடிஎம்களில் பணம் இல்லாமல் போகலாம்
Recommended Video
சென்னை: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
வங்கி ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முடிந்தது. இதையடுத்து அவர்களுக்கு 2 சதவீத ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த ஊதிய உயர்வு போதாது என்று வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மே 30 மற்றும் 31ம் தேதிகளில் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர். இந்நிலையில் நேற்று மாலை நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது.
இதையடுத்து வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். அகில இந்திய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நடைபெறும் இந்த போராட்டத்தில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள்.
இதனால் வங்கி சேவைகள் மட்டும் அல்ல ஏடிஎம் சேவையும் பாதிக்கப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை சம்பள நாள் என்பதால் பலரும் ஏடிஎம்களில் பணம் எடுப்பார்கள்.
வேலைநிறுத்தத்தால் நாளை ஏடிஎம்களில் பணம் இருப்பது சந்தேகமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.