4வது நாளாக வங்கிகளில் அலைமோதும் கூட்டம்.. ஞாயிற்றுக் கிழமையிலும் நிம்மதி இல்லை.. புலம்பும் மக்கள்
4வது நாளாக இன்றும் வங்கி வாசலில் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற மக்கள் குவிந்துள்ளனர்.
சென்னை: பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற இன்றும் வங்கி வாசலில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட நிம்மத்தி இல்லாமல் பணத்தை மாற்ற காத்துக்கிடப்பதாக மக்கள் புலம்பி வருகின்றனர்.
சென்னையில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக 4வது நாளாக இன்றும் வங்கி வாசல்களில் மக்கள் காத்துக் கிடக்கின்றனர். கடந்த 9ம் தேதியில் இருந்து பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மோடி அரசு அறிவித்தது. கையில் இருந்த 100 ரூபாய் நோட்டுகள் செலவழிக்கப்பட்ட நிலையில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செலவிட முடியாமல் மக்கள் தவித்து வந்தனர்.
இந்நிலையில், மத்திய அரசு 10ம் தேதியில் இருந்து வங்கிகளில் பழைய நோட்டுக்களை செலுத்தி புதிய நோட்டுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தது. இதனால், அத்தியாவசிய செலவிற்கு கூட பணம் இல்லாத மக்கள் வங்கி மற்றும் அஞ்சலகங்களை நோக்கி படை எடுக்க தொடங்கினார். மக்களின் வசதிக்காகவே சனி மற்றும் ஞாயிறு கிழமைகளிலும் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.
எனினும், வங்கிகளில் கூட்டம் கட்டுக்கடங்காமல் கடந்த 3 நாட்களாக இருந்தது போன்றே, இன்றும் இருக்கிறது. ஞாயிறு ஒருநாள் தான் வீட்டில் நிம்மதி இருப்போம். பணத்திற்காக இன்றும் வரிசையில் காத்துக் கிடக்க வேண்டிய அவதியில் இருக்கிறோம் என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்து வருகின்றனர். இன்னும் ஒரு வாரத்திற்கு வங்கிகளில் இந்த நிலைதான் நீடிக்கும் என்று தெரிகிறது.
கூட்டம் அதிகமாக இருக்கும் வங்கிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் ஒரு சில வங்கிகளில் கூட்டம் இருந்தாலும், அதனைக் கட்டுப்படுத்தவோ அல்லது அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் பாதுகாக்கவோ போலீசார் நிறுத்தப்பட வில்லை.