முட்டை கொள்முதலில் நடந்த ஊழல் மதிப்பு ரூ.5000 கோடி.. பொன்.ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி தகவல்
Recommended Video
சென்னை: முட்டை கொள்முதலில் 5 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பதாக மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். அது குறித்து முறையாக விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
சென்னை விமான நிலையத்தில், பொன்.ராதாகிருஷ்ணன் இன்று அளித்த பேட்டி:
தமிழக மக்கள் மொட்டை போடப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். முட்டை மூலம் மொட்டை போடப்பட்டிருந்தது 5,000 கோடி ரூபாய். இது முறைப்படி விசாரிக்கப்பட வேண்டும் என்றார், புன்முறுவலுடன்.
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, தமிழகத்தில் ஊழல் பெருக்கெடுத்துள்ளது என கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 51 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், அங்கன்வாடி குழந்தைகளுக்காக, தமிழக சத்துணவு திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.500 கோடியில் 1 கோடி முட்டை கொள்முதல் செய்யப்படுகிறது.
ஏற்கெனவே முட்டையை வழங்கி வரும் கிறிஸ்டி நிறுவனத்துக்கான ஒப்பந்தம் இம்மாதம் முடிகிறது. எனவே, புதிய ஒப்பந்தத்துக்கான டெண்டர் கடந்த ஜூன் 10ம் தேதி கோரப்பட்டு, வியாழக்கிழமை ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், கிறிஸ்டி நிறுவனத்தில் வருமானவரித் துறை சோதனை நடத்தியதால் முட்டை கொள்முதல் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.