திருபுவனம் பாமக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. 5 பேர் கைது
கும்பகோணம்: திருபுவனத்தில் பாமக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் 5 பேரை கைது செய்திருக்கிறார்கள்.
திருபுவனத்தில் வசித்து வந்தவர் ராமலிங்கம். இவர் பாமக பிரமுகர், அக்கட்சியின் முன்னாள் நகரச் செயலாளராகவும் இருந்தவர். கல்யாண வீடுகளுக்கு சாமியானா, பந்தல் போடுவது, வாடகைக்கு பாத்திரம் தரும் கடையை நடத்தி வந்தார்.
கல்யாண ஆர்டர் ஒன்று வந்ததால், அதற்கான வேலையாட்களை தேடி பாக்கியநாதன் தோப்பு என்ற பகுதிக்கு சென்றார். அங்கே வந்த சிலபேர் ராமலிங்கத்தை மதமாற்றம் செய்யுமாறு சொல்லியதாக தெரிகிறது. அதற்கு ராமலிங்கம் மறுக்கவும் கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது.
மர்மகும்பல்
இதனால் இரு தரப்பிலும் வாக்குவாதம் முற்றியது. உடனே அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தி இரு தரப்பையும் அனுப்பி வைத்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்த ராமலிங்கத்தை ஆட்டோவில் சிலர் வழிமறித்தனர்.
உயிரிழந்தார்
கையில் ஆயுதங்களுடன் இறங்கிய அந்த மர்மகும்பல் ராமலிங்கத்தின் கைகளையும் வெட்டிவிட்டு, உடலின் மற்ற பாகங்களையும் அரிவாளால் தாக்கிவிட்டு அதே ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்றது. இதில் நிலைகுலைந்து விழுந்த ராமலிங்கத்தை ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றும் காப்பாற்ற முடியவில்லை. இதனால் திருப்புவனம் பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது.
கடையடைப்பு
கொலையாளிகளை கைது செய்யும்வரை ராமலிங்கத்துக்கு இறுதி சடங்கு செய்ய மாட்டோம் என்று குடும்பத்தினர் சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மற்றொரு புறம் திருபுவனம், திருவிடைமுருதூர் பகுதிகளில் கடையடைப்பு நடந்தது.
கடும் கண்டனங்கள்
இதனால் வன்முறை ஏதும் ஏற்பட்டு விடாமல் இருக்க 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். ராமலிங்கத்தின் வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ராமலிங்கம் படுகொலை குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர்.
5 பேர் கைது
இந்நிலையில், ராமலிங்கத்தை ஆட்டோவில் வந்து வெட்டி கொன்றது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களது பெயர் முகமது ரியாஸ், சர்புதீன், நிஜாமுதீன், அசாருதீன், ரிஸ்வான் என்பதாகும். இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.