கொடநாடு கொள்ளை வழக்கு.. குண்டர் சட்டத்தில் 5 பேர் சிறையில் அடைப்பு
நீலகிரி: கொடநாடு கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிறையில் உள்ள 5 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களா உள்ளது. பாதுகாப்புகள் நிறைந்த இந்த பங்களாவில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி 10 ஆம் எண் கேட் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஓம் பகதூர், மர்ம நபர்களால் கொலைசெய்யப்பட்டார்.
மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூரைத் தாக்கிய மர்ம கும்பல், எஸ்டேட்டில் உள்ள பங்களாவுக்குள் புகுந்த தங்கம், வைர நகைகள், பணம் மற்றும் ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றது.
கொடநாடு பங்களா கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய நபராக, தனிப்படை போலீஸாரால் சந்தேகிக்கப்பட்டவர், கனகராஜ். இவர், போயஸ்கார்டன் முன்னாள் கார் டிரைவர். இவர் கொலை நடந்த சில தினங்களில் ஆத்தூரை அடுத்த சந்தனகிரி தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் மோதி உயிரிழந்தார்.
கனகராஜின் நண்பரும் முக்கிய குற்றவாளியுமான சாயன் சாலை விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அவர் உடல்நலம் தேறிய பின்னர் கைது செய்யப்பட்டார். இதுவரை இந்த கொலை, கொள்ளை வழக்கில் 10 பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் கைதான 10 பேரில் 5 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க நீலகிரி மாவட்ட ஆட்சியர் திவ்யா உத்தரவிட்டுள்ளார். தீபு, சதீஷன், மனோஜ், ஜஜின் உள்பட 5 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.