ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்கள் விண்ணப்பம்!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க விருப்பம் தெரிவித்து 5 நிறுவனங்கள் ஒப்பந்தத்திற்கு விண்ணப்பித்துள்ளன.
சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைப்பதற்கான டெண்டர் ஒதுக்குவதற்கான காலக்கெடு இன்றுடன் முடிகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்கள் விண்ணப்பம் செய்துள்ளன.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் ரூ. 43.63 கோடி செலவில் நினைவிடம் கட்டுவதற்கு பொதுப்பணித் துறை சார்பில் கடந்த ஜனவரி 18-ம் டெண்டர் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. பிப்ரவரி 7ம் தேதி மாலை 4 மணிக்கு டெண்டர் இறுதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் அரசின் இந்த முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ரூ.2 கோடிக்கு மேல் டெண்டர் அறிவிப்பானை வெளியிட்டால் 30 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது. இதனால் சென்னை உயர்நீதிமன்றம் டெண்டர் இறுதி செய்யும் கால அவகாசத்தை பிப்ரவரி 21 வரை என நீட்டிப்பு செய்தது.
இன்றுடன் இதற்காக கெடு முடிவடைந்த நிலையில், ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்ட விருப்பம் தெரிவித்து 5 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இவற்றில் எந்த நிறுவனம் குறைந்த டெண்டர் கோரியுள்ளதோ அந்த நிறுவனத்திற்கே ஒப்பந்தம் இறுதி செய்து வழங்கப்படும். ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட நிறுவனத்தின் பெயரை பொதுப்பணித்துறை மார்ச் 1ம் தேதி அறிவிக்கிறது.