பசுமை வழிசாலை எதிர்ப்பு: 5 மாவட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
5 மாவட்டங்களில் மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி வைத்துள்ளனர்.
திருவண்ணாமலை: சேலம்-சென்னை பசுமைவழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 5 மாவட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் இன்று தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சேலம்-சென்னை இடையே பசுமை வழி சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக சேலம், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 277 கிலோ மீட்டரில் அமையும் இந்த சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதனால் விளைநிலங்கள், நீர் நிலைகளை என இயற்கை வளங்களை அழித்து பசுமை வழிச்சாலை அமைக்கப்படுகிறது.
கதறி அழுத பெண்கள்
தங்களுடைய நிலம் கையகப்படுத்தப்பட உள்ள நிலையில், திட்டத்துக்கு நிலம் வழங்கப்போவதில்லை என தீர்மானம் நிறைவேற்றி, 5 மாவட்டங்களிலுள்ள கிராம மக்கள் பலவகை போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.ஆனாலும் தமிழக அரசு பசுமை வழிச்சாலை திட்டத்தினை அமைப்பதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. தங்கள் கண்ணெதிரிலேயே நிலம் பறிபோவதை பார்த்து பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். சிலர் மயங்கி விழுதனர். மேலும் பலர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். மக்கள் தங்கள் எதிர்ப்புகளை பல வழிகளில் தெரிவித்தும், சேலம் பூலாவரி கிராமத்தில் கற்களை நடும் பணியானது நேற்றுடன் முடிவடைந்தது.
திருவண்ணாமலையில் சர்வே
திருவண்ணாமலை மாவட்டத்தில் 124 கிலோமீட்டர் தொலைவு சாலை அமைய உள்ளது. அவ்வாறு அமையும் பட்சத்தில் இந்த மாவட்டத்தில் சுமார் 92 கிராமங்களை சேர்ந்த 30 ஆயிரம் குடும்பங்கள் நேரடியாகவே பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. இதில், 30 கிலோ மீட்டர் தொலைவிற்கு செங்கம், கலசப்பாக்கம் தாலுக்காக்களில் நில அளவீடு எடுக்கும் பணியினை முடித்துவிட்டு தற்போது மண்மலை, காத்தமடுவு கிராமங்களுக்குள் அடியெடுத்து வைத்துள்ளனர்.
நேரடி பாதிப்பு
இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தியும், அதிகாரிகள் தற்போது நில அளவீடு செய்யும் பணிகளில் மும்முரமாக உள்ளனர். இதனால் இந்த பசுமை வழிச்சாலையினால் முழுவதுமாகவும் அளவுக்கு அதிகமாகவும், நேரிடையாகவும் பாதிக்கப்படும் 5 மாவட்ட மக்கள் இன்று கருப்பு கொடி ஏற்றும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
5 மாவட்ட மக்கள் போராட்டம்
இந்த திட்டத்தை கைவிட கோரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய 5 மாவட்ட மக்களும், விவசாயிகளும் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி வைத்து தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 92 கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கறுப்பு கொடியை ஏற்றி வைத்துள்ளனர். இவ்வாறு பசுமை வழிசாலை திட்டத்துக்கு 5 மாவட்டங்களிலும் லட்சக்கணக்கணக்கான மக்கள் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.