சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தால் 5 மாவட்டங்கள் பயன் அடையும்: தமிழிசை செளந்தரராஜன்
சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தால் 5 மாவட்டங்கள் பயன் அடையும் என்று தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை : சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தால் 5 மாவட்டங்கள் பயன் பெறும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஆனால், பொதுமக்கள் மத்தியில் இந்த திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது.
5 மாவட்டங்களின் வழியாக சென்னை வந்தடையும் இந்த 8 வழிச்சாலை திட்டத்திற்காக 8 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேலும், இந்தப் பாதையில் ஆறுகளும், மலைகளும் பாதிக்கப்படும் என்று மக்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.
ஆனால், விவசாயிகள் மற்றும் மக்களின் கோரிக்கையை ஏற்காத அரசு, திட்டத்தை செயல்படுத்த முனைப்புடன் தயாராகி வருகிறது. இந்த திட்டத்தை எதிர்த்துப் பேசியதற்காக மன்சூர் அலிகான், பியூஷ் மனுஷ் மற்றும் வளர்மதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறுகையில், சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தால் 5 மாவட்டங்கள் பயன்பெறும். மக்களை பாதிக்கும் திட்டங்களை பாஜக எப்போதும் செயல்படுத்தாது.
விரைவில் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் கந்தக அமிலத்தை அகற்ற தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சியில் அக்கறை இல்லாதவர்களே அனைத்து திட்டங்களையும் எதிர்ப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.