தண்ணீரின்றி கருகிய பயிர்கள்.. காவிரி டெல்டாவில் இதுவரை 5 விவசாயிகள் மரணம்
காவிரி நீரை நம்பியும் வடகிழக்கு பருவமழையையும் நம்பி பயிரிட்ட விவசாயிகள், கருகும் பயிர்களைக் கண்டு அதிர்ச்சியில் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.
தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் மரணம் தொடர்கதையாகி வருகிறது. அடுத்தடுத்து அதிர்ச்சியில் விவசாயிகள் மரணமடைந்து வருகின்றனர் கருகிய நெற்பயிரைக் கண்டு மரணமடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஜீவாதாரமே விவசாயம்தான். ஜூன் மாதம் வரவேண்டிய காவிரி நீர் வராத காரணத்தால் கடந்த சில மாதங்களாக குறுவை பொய்த்துப் போக, காலம் தாழ்ந்து வந்த காவிரி நதிநீரை நம்பி சம்பா பயிரிட்டனர். வடகிழக்குப் பருவமழை கை கொடுக்கும் என்று நம்பிய நிலையில் மழையும் இன்னும் சரிவர பெய்யவில்லை. கடன்வாங்கி பயிரிட்ட நெற்பயிர்கள் கருகியதுதான் மிச்சம்.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார்... காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் வாடிய பயிரைக் கண்டு மனம் நொந்து உயிரிழக்கின்றனர் என்பதுதான் வேதனை
விவசாயி தற்கொலை
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ராதாபுரத்தைச் சேர்ந்த விவசாயி 4 ஏக்கரில் பயிரிட்ட நெற்பயிர்கள் கருகியதால் கடந்த 4ம் தேதி மன உளைச்சலில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அழகேசன் மரணம்
இந்த சோகம் மறைவதற்குள் மன்னார்குடி அடுத்த கோட்டூர் ஆதிச்சபுரத்தை சேர்ந்தவர் அழகேசன், 36 இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் வயலில் சம்பா நேரடி விதைப்பு செய்திருந்தார். மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்னும் வராததால் இவரது வயலில் முளைத்த பயிர்கள் கருக துவங்கிவிட்டன. கருகிய பயிர்களை பார்த்து கண்ணீர் வடித்த அழகேசன் சிறிது நேரத்தில் வயலிலேயே சுருண்டு விழுந்து இறந்தார்.
கருகிய பயிர்கள்
தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த கீழத்திருப்பந்துருத்தி செபஸ்டியார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெள்ளையன் (எ) ராஜேஸ்கண்ணன்,42 2 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து நேரடி நெல் விதைப்பு செய்திருந்தார். தண்ணீரின்றி பயிர்கள் கருகியதால், மன வேதனையில் நெஞ்சு வலிப்பதாககூறி சுருண்டு விழுந்து இறந்தார்.
கடன் வாங்கி விவசாயம்
மூன்று விவசாயிகள் அடுத்தடுத்து மரணமடைந்த நிலையில் கடந்த 6ம் தேதி நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த ரத்தினவேல் இருமுறை நேரடி நெல் விதைப்பு செய்தும் பயிர்கள் கருகியதால் கந்து வட்டிக்கு கடன் வாங்கி நாற்றுகள் வாங்கி நடவு செய்தார். கடந்த 6ம் தேதி வயலுக்கு சென்று பார்த்த போது நாற்றுகள் கருகியிருக்கவே வயலிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
5 விவசாயிகள் பலி
இந்த சோகம் மறைவதற்குள் நாகை மாவட்டத்தில் மேலும் ஒரு விவசாயி உயிரிழந்துள்ளார். நாகை கீழ்வேளூர் அருகே கீழகாவாலக்குடியில் நவநீதம் என்ற என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். தண்ணீர் பாய்ச்ச பணம் இல்லாததால் வேதனையில் தன்னுடைய நிலத்திலேயே நவநீதம் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காவிரி தண்ணீர் வராத காரணத்தால் டெல்டா மாவட்டத்தில் 5 விவசாயிகளின் உயிர்கள் பலியாகியுள்ளது.
இழப்பீடு என்ன?
உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா. 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று எதிர்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
காவிரி தண்ணீரை திறக்கக் கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடகா அரசு அடம் பிடிக்கிறது. இனியாவது தமிழக அரசு விழித்துக்கொள்ள வேண்டும் என்பதே டெல்டா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
பயிர் காப்பீடு தொகை
விவசாயிகள் வேளாண் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்துள்ளனர். கருகிய பயிர்களை ஆய்வு செய்து அளித்தால் காப்பீடு நிறுவனம் இழப்பீடு தொகையை வழங்க தயாராக உள்ளது. ஆனால் அரசு தரப்பில் இருந்து அறிக்கை செல்லாத காரணத்தினாலே காப்பீடு பெற முடியாமல் விவசாயிகள் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.