கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்ற 2 பேர் கைது.. 5 கிலோ கஞ்சா பறிமுதல்
கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை: புளியரை சோதனை சாவடி வழியாக தமிழக - கேரளா எல்லையில் இரு சக்கர வாகனத்தின் மூலம் கஞ்சா கடத்த முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தை இணைக்கும் புளியரை சோதனை சாவடியில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனையிட முயன்றனர். இருசக்கர வாகனத்தில் வந்தவர் இருவர் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக ஓட்டினர். இதனிடையே எதிரே லாரி வந்ததால் இருவரும் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர்.
இதையடுத்து அவர்களை பிடித்த போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் சோதனை செய்தபோது அதில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், விஷ்ணு, ரோஸன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். சோதனையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.