பெல்ஜியம் குண்டுவெடிப்பு எதிரொலி: சென்னை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு !
சென்னை: பெல்ஜியம் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டள்ளது. பார்வையாளர்கள் வருகைக்கு வரும் 24 ஆம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 55 பேர் படுகாயமடைந்தனர்.
14 பேர் விமான நிலையத் தாக்குதலிலும் 20 பேர் மெட்ரோ ரயில் நிலைய தாக்குதலிலும் பலியாகியுள்ளதாக பிரஸ்ஸல்ஸ் தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் பியர் மெய்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பெல்ஜியம் தொடர் குண்டுவெடிப்பின் எதிரொலியாக சென்னை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய உளவுத் துறையின் பாதுகாப்பு எச்சரிக்கையைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு நாளை மறுதினம் வரை அமலில் இருக்கும். மேலும் பார்வையாளர்கள் வருகைக்கும் வரும் 24 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.