பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகர் தென்னரசு கொலை வழக்கில் 5 பேர் சரண்
திருவள்ளூர்: பகுஜன் சமாஜ் கட்சி செயலாளர் தென்னரசு கொலை வழக்கில் 5 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர்.
சென்னை புளியந்தோப்பு வெங்கடாபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் தென்னரசு (வயது35). வடசென்னை மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி செயலாளராக இருந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் தாமரைப்பாக்கம் கூட்டுரோட்டில் உள்ள திருமணமண்டபத்தில் அவரது உறவினர் திருமணம் வியாழக்கிழமையன்று நடைபெற்றது. இதில் இவர் தனது மனைவி மைதிலி, தாய் சகுந்தலா ஆகியோருடன் வந்து கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர், தென்னரசு திருமண மண்டப வாசலில் நிறுத்தி இருந்த தனது காரில் வந்து ஏற சென்றார். பின் இருக்கையில் மனைவி மற்றும் தாய் காரில் ஏறி அமர்ந்தனர். டிரைவர் சீட்டில் அமர தென்னரசு கதவை திறந்தார்.
ரத்த வெள்ளத்தில்
அப்போது திருமண மண்டப வாசலில் தயாராக இருந்த மர்ம கும்பல் ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் பாய்ந்து வந்து தென்னரசை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் தென்னரசு கீழே சாய்ந்தார். தடுக்க முயன்ற அவரது மனைவி மைதிலிக்கு, கையில் அரிவாள் வெட்டு விழுந்தது.
ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த தென்னரசு உயிருக்கு போராடினார். மைதிலியின் கூக்குரல் கேட்டு கூட்டம் கூடியது. இதனால் மர்ம கும்பல் இரண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி திருவள்ளூர் சாலையில் தப்பிச் சென்றது.
வெட்டிக்கொலை
பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவத்தை நேரில் பார்த்த உறவினர்களும் அந்த பகுதிவாசிகளும் பயந்துபோய், சாலையில் ஓடினர்.
இந்த கொலை சம்பவத்தை நேரில் பார்த்த தென்னரசின் தாயார் சாந்தா, கொலை செய்தவன் தன் வீட்டிற்கு வந்ததாக கூறிய படி, மயங்கி விழுந்தார். தென்னரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வழியிலேயே இறந்தார்.
மனைவி படுகாயம்
ஊத்துக்கோட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். காயம்பட்ட மைதிலி சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தென்னரசின் உடல், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கொல்லப்பட்ட தென்னரசு மீது சென்னையின் பல காவல் நிலையங்களில், 20க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. அவரது எதிரிகள் இதை செய்திருக்கலாம். இரண்டு தனிப்படைகள் அமைத்து, குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகிறோம். குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
வெள்ளை ரவியுடன் தொடர்பு
படுகொலை செய்யப்பட்ட தென்னரசுக்கு சம்பத் என்ற அண்ணனும், பாம் சரவணன் என்ற தம்பியும் உள்ளனர். இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பாம் சரவணன் ஒரு வழக்கு சம்மந்தமாக சிறையில் உள்ளார். 6-ம் வகுப்பு மட்டுமே படித்துள்ள தென்னரசு கேபிள் டி.வி. ஆப்பரேட்டராக இருந்துள்ளார். பின்னர் வடசென்னையை கலக்கி வந்த வெள்ளை ரவியுடன் தென்னரசுக்கு பழக்கம் ஏற்பட்டு தனது சாம்ராஜியத்தை வளர்த்துக் கொண்டாராம்.
பழிக்குப் பழி
தென்னரசு மீது நீலாங்கரையில் கொலை, புளியந்தோப்பில் கொலை முயற்சி, சென்னை முழுவதும் கட்டபஞ்சாயத்து, வழிப்பறி என, மொத்தம்12 வழக்குகள் உள்ளன. அயனாவரம் கக்கன்ஜி காலனி பகுதியை சேர்ந்த அம்பேத்கர், 24 என்பவர், சிறுவயதில் இருந்து, தென்னரசு வீட்டில் வளர்ந்தவர். கடந்த, நான்கு ஆண்டுகளுக்கு முன், பணத்தை எடுத்ததாக, அம்பேத்கரை, தென்னரசு அடித்ததாகவும், அதற்கு பழி வாங்கவே, இந்த கொலை நடந்திருக்கலாம் எனவும், போலீசார் சந்தேகப்பட்டனர். தலைமறைவான அம்பேத்கர் என்பவரை போலீசார் தேடிவந்தனர்.
5 பேர் சரண்டர்
இதனிடையே அம்பேத்கர், கலாநிதி, ஜெயசீலன், அசோக்குமார், பொன்னை பாலா ஆகிய 5 பேரும் பெரியபாளையம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் தென்னரசு கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.