தொடர் மழை, ரெட் அலர்ட் எதிரொலி.. தமிழகத்தின் பல பகுதிகளுக்கு விரைகிறது பேரிடர் படை
தேசிய பேரிடர் மீட்பு படையினர் பல்வேறு மாவட்டங்களுக்கு விரைந்தனர்.
Recommended Video
சென்னை: தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு விரைந்து உள்ளனர். தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து இந்த நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 7-ம் தேதி மிக கனமழை பெய்யும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 8ம் தேதி வரை அது நீடிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதற்காக பொதுமக்களுக்கு உச்சக்கட்டமாக 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் இந்திய வானிலை ஆய்வு மையமும் அறிவுறுத்தியது.
[சென்னை மற்றும் புறநகரில் மீண்டும் மழை.. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்.. வாகன ஓட்டிகள் அவதி!]
வெள்ளக்காடு
அதற்கேற்றார்போல் கடந்த 2 தினங்களாக தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. 6 மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த 2 நாள் மழைக்கே சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. நிறைய இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்பு
இந்நிலையில், ரெட் அலர்ட் எச்சரிக்கையை முன்னிட்டு வெள்ள தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு விரைந்து ஈடுபட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் உதவியை நாடியது.
4 மாவட்டங்களுக்கு விரைவு
தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று, 5 தேசிய பேரிடர் மீட்புக்குழுக்கள் விரைந்துள்ளன. அரக்கோணத்திலிருந்து புறப்பட்ட இந்த மீட்பு குழுவினர் நீலகிரி, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். அதேபோல கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மட்டும் 2 மீட்புப்படையினர் விரைந்திருக்கிறார்கள்.
தயார் நிலை
வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் அந்த இடங்களுக்கு விரைந்து செல்ல வசதியாக இப்போதே பேரிடர் மீட்புப் படையினர் முக்கியமான இடங்களில் நிறுத்தப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகவே இந்த பேரிடர் மீட்புப் படையினர் மேற்கண்ட மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.
புதிய புயல் சின்னம்
8ம் தேதி முதல் வட கிழக்குப் பருவ மழை தொடங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று ஒரு புதிய புயல் சின்னம் வங்கக் கடலில் உருவாகவுள்ளதாகவும் வானிலை மையம் இன்று அறிவித்துள்ளது நினைவிருக்கலாம்.