சென்னையில் காற்றாடியின் மாஞ்சா நூல் அறுத்து 5 வயது சிறுவன் பலி
சென்னை: சென்னையில் காற்றாடியின் மாஞ்சா தடவப்பட்ட கயிறு கழுத்தை அறுத்ததில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் குறிப்பாக வட சென்னையில் காற்றாடி பறக்க விடுவது அதிக அளவில் உள்ளது. இந்த காற்றாடி பறக்க விடுவது பல சமயங்களில் விபரீதத்தில் போய் முடிந்து விடுகிறது. காரணம், அந்த காற்றாடியில் கட்டப்படும் மாஞ்சா தடவப்பட்ட நூல்.
இந்த நூல் கத்தியை விட மிக ஷார்ப் ஆக உள்ளதால் இதனால் பல உயிர்கள் பறி போயுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் மாஞ்சா நூலைக் கட்டி காற்றாடி பறக்க விடுவதற்கு சென்னை காவல்துறை தடை விதித்துள்ளது. ஆனாலும் அதை யாரும் மதிப்பதாகவே தெரியவில்லை.
கடந்த சில மாதங்களில் பலமுறை இந்த மாஞ்சா நூலால் பல விபத்துக்கள் நடந்துள்ளன. இந்த நிலையில் இன்று ஒரு சிறுவனின் உயிரே பறி போயுள்ளது. பெரம்பூர் பகுதியில் தனது பெற்றோருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அஜய் என்ற 5 வயது சிறுவனின் கழுத்தை எங்கிருந்தோ வந்த காற்றாடியின் மாஞ்சா நூல் பலமாக அறுத்து விட்டது.
ரத்தம் சொட்டச் சொட்ட உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிறுவன் அஜய் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தான்.
காற்றாடி விட போலீஸார் கடும் எச்சரிக்கை விடுத்தும் கூட தொடரும் இதுபோன்ற சம்பவத்தால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.