ஓராண்டில் 50,000 தொழில் நிறுவனங்கள் மூடல்- 5 லட்சம் பேர் வேலை இழப்பு- தமிழக அரசு ஷாக் தகவல்
தமிழகத்தில் ஓராண்டில் 50,000 சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 50,000 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாகம் தமிழக அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2007-2008-ம் ஆண்டில் 27,209 என இருந்தது. இதன் மூலம் ரூ.2,547.14 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு, ரூ.8,739.95 கோடி அளவுக்கு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. 2 லட்சத்து 42 ஆயிரத்து 855 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்தது.
உத்யோக் ஆதார் பதிவறிக்கை செயலாக்கத்திற்கு வந்த பிறகு, 2016-2017-ம் ஆண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 67 ஆயிரத்து 310 அளவுக்கு உயர்ந்தது. முதலீடும் ரூ.36,221.78 கோடி என்ற அளவுக்கு அதிகரித்தது. இதன் மூலம் வேலைவாய்ப்பு 18 லட்சத்து 97 ஆயிரத்து 619 பேருக்கு கிடைத்தது.
2017-2018-ம் ஆண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 17 ஆயிரத்து 981 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. முதலீட்டின் அளவும் ரூ.25,373.12 கோடி என்ற அளவுக்கு சரிந்துள்ளது. இதன் காரணமாக வேலைவாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கையும் 13 லட்சத்து 78 ஆயிரத்து 544 ஆக குறைந்தது.
இவ்வாறு தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.