3 நொடியில் தகர்க்கப்பட்ட 11 மாடிக் கட்டடம்.. செலவு எவ்வளவு?
மவுலிவாக்கத்தில் தகர்க்கப்பட்ட 11 மாடி கட்டடத்தை இடிப்பதற்கு 50 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது.
சென்னை: மவுலிவாக்கத்தில் ஆபத்தான நிலையில் இருந்த 11 அடுக்கு மாடிக் கட்டடத்தை நொடிப் பொழுதில் இடித்து தள்ள 50 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை மவுலிவாக்கத்தில் 11 அடுக்குகள் கொண்ட 2 கட்டடங்கள் கட்டப்பட்டன. இந்த 2 கட்டடங்களில் ஒன்று கடந்த 2014ம் ஆண்டு ஜுன் மாதம் திடீரென இடிந்து சரிந்து தரைமட்டமானது. இந்த இடிபாடுகளில் சிக்கி தொழிலாளர்கள் 61 பேர் உயிரிழந்தனர். மேலும் 27 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், ஆபத்தாக இருந்த இன்னொரு கட்டடத்தை இடிக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் 11 மாடிக் கட்டடத்தை இடிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து, தமிழக அரசு மேக்லிங்க் என்ற தனியார் நிறுவனத்திடம் இந்த கட்டடத்தை இடிப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டது.
இந்த ஒப்பந்தத்தை எடுத்து கொண்ட தனியார் நிறுவனம், இடிக்கப் போகும் கட்டடத்தை 3 மாதங்கள் ஆய்வு செய்தது. கட்டடம் கட்டப்பட்ட முறை, கான்கிரிடின் தன்மை, இரும்பின் தன்மை ஆகியவற்றை 3 குழுக்கள் ஆய்வு நடத்தியது. பின்னர், இந்தக் கட்டடம் எப்போது தகர்க்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், 100 மீட்டர் சுற்றளவில் உள்ள குடியிருப்புவாசிகள் பத்திரமாக அப்புறப்படுத்தப்பட்டனர். இரண்டு லாரிகள் முழுக்க வெடி மருந்துகள் கொண்டு வரப்பட்டு கட்டடத்தில் தேவையான இடத்தில் வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த 2ம் தேதி மாலை 6.52 மணியளவில் 11 அடுக்கு மாடி 3 நொடிகளில் நவீன தொழில் நுட்பம் கொண்டு தகர்க்கப்பட்டது. 11 மாடிக் கட்டடம் இடிப்பதற்கு மொத்தமாக ஆன செலவு குறித்து, மேக்லிங்க்
நிறுவனத்தில் முதன்மை தலைமை செயலாளர் பொன்லிங்கம் கூறும் போது, 50 லட்சம் ரூபாய் செலவானதாக தெரிவித்தார். மேலும், இதே போன்று தமிழகத்தில் 6 கட்டடங்களை தகர்த்துள்ளதாகவும் மும்பையில் 30 கட்டடங்களை தகர்த்துள்ளதாகவும் பொன்லிங்கம் தெரிவித்தார்.