தமிழகத்தில் உயர் நிலைப் பள்ளிகளான 50 நடுநிலைப் பள்ளிகள்
சென்னை: தமிழகத்தில் 50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் புதிய ஆசிரியர் பணியிடம் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை ஆண்டுதோறும் பள்ளிகளை தரம் உயர்த்தி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 760 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தாண்டு 50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கான ஆணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபிதா வெளியிட்டுள்ளார். தரம் உயர்த்தப்படும் ஒவ்வொரு பள்ளியிலும் தலா ஒரு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம், தலா 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் புதிதாக 50 உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடமும், 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடமும் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை வருமாறு,
காஞ்சிபுரம் மாட்டத்தில் 4 பள்ளிகளும், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, ஈரோடு, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பள்ளிகளும், கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாகப்பட்டிணம், மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் தலா 1 பள்ளியும், வேலூர் மாவட்டத்தில் 7 பள்ளிகளும், திருச்சி, விருதுநகர் மாவட்டங்களில் தலா 1 பள்ளியும் தரம் உயர்த்தப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மேலநீலிதநல்லூர் ஒன்றியம், பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.