ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றிய 50 பொதுப்பணித்துறை பொறியாளர்கள் அதிரடி இடமாற்றம்...
சென்னை : தமிழகத்தில் ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்து வந்த பொதுப்பணித்துறை பொறியாளர்கள் 50 பேரை தமிழக அரசு அதிரடி இடமாற்றம் செய்துள்ளது.
தமிழக பொதுப்பணித்துறையில் நீர்வள ஆதாரம் மற்றும் கட்டிட அமைப்பு என 2 பிரிவுகளாக பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம் 18 செயற்பொறியாளர்களுக்கு, கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இதனைதொடர்ந்து பதவி உயர்வு மற்றும் பணி ஓய்வு காரணமாக செயற்பொறியாளர் பணியிடங்கள் காலியாகின. இதனை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த 35 உதவி செயற்பொறியாளர்களுக்கு, செயற்பொறியாளர்கள் பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இவர்களுக்கான பணி இடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்தநிலையில் ஒரே மாவட்டத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றி வந்த 50 செயற்பொறியாளர்கள், வெவ்வேறு மாவட்டங்களுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பொதுப்பணித்துறை வரலாற்றில் ஒரே நேரத்தில் 18 பேர் கண்காணிப்பு பொறியாளராகவும், 35 பேர் செயற்பொறியாளராகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
மேலும் தங்களை பாதிக்காத வகையில் இடமாற்றம் வழங்கியதற்கு முதல்-அமைச்சருக்கும், துறை அமைச்சருக்கும் பொறியாளர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.