சென்னை அருகே 50 தெரு நாய்களை தீ வைத்து கொன்ற கிராம மக்கள்.. போலீசார் வழக்குப்பதிவு
சென்னை: 50 தெரு நாய்களை மண்ணெண்ணை ஊற்றி கிராமத்து மக்கள் எரித்து கொன்ற சம்பவத்தில் விலங்கு நல ஆர்வலர்கள் தலையிட்டதால் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னையிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில், மேல்மருவத்தூர் அருகேயுள்ள கீழமூர் என்ற கிராமத்தில், ஜூன் 5ம் தேதி சுமார் 50 தெரு நாய்கள் எரித்து கொல்லப்பட்டதாக விலங்கு நல ஆர்வலர் அஸ்வத் என்பவருக்கு கிராமத்தை சேர்ந்த ஒருவர் ரகசிய தகவல் கொடுத்துள்ளார்.
இந்த தகவலின்பேரில், அஸ்வத் சம்பவ இடத்தை பார்வையிட்டு பாதி எரிந்த நிலையில் கடந்த நாய் உடல்களை கண்டெடுத்து ஆவணப்படுத்தியுள்ளார். இதுகுறித்து மேல் மருவத்தூர் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில் முரளி, முத்து, முருகதாஸ் மற்றும் ஜீவா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகளை நாய்கள் கடித்ததாகவும், சில ஆடுகள் இறந்துவிட்டதாகவும், எனவே விஷம் வைத்து கொன்று, நாய்களை எரித்ததாகவும் ஊர்மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அப்படி எதுவும் தகவல் இல்லை என்று அஸ்வத் கூறுகிறார்.