சென்னை: தனியார் பள்ளியில் மில்க் ஷேக் குடித்த 50 குழந்தைகளுக்கு வாந்தி-மயக்கம்
சென்னை: சென்னையில் காலவதியான மில்க் ஷேக் குடித்த குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
குழந்தைகள் தினவிழா நேற்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கொண்டாடப்பட்டது. சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் காலை 9 மணி முதல் 11 மணி வரை நிகழ்ச்சி நடைபெற்றது. 2000 மாணவ- மாணவிகள் பங்கேற்ற இந்த விழாவில் நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. குழந்தைகள் நேருவின் பெருமைகளை விளக்கி பேசினார்கள்.
1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரு தனியார் நிறுவனம் இலவசமாக வழங்கிய ‘‘மாதிரி மில்க்ஷேக்'' டப்பாவை கொடுத்தனர்.
மில்க்ஷேக் கிடைத்த மகிழ்ச்சியில் சிறு குழந்தைகள் உடனே குடிக்க ஆரம்பித்தனர். அதை குடித்த சிறிது நேரத்தில் குழந்தைகள் சிலர் வாந்தி எடுத்தனர். சிலருக்கு மயக்கம் ஏற்பட்டு சுருண்டு விழுந்தனர். மேலும் சிலருக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. குழந்தைகள் ஒவ்வொருவராக மயங்கி விழுந்ததை பார்த்து ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மில்க் ஷேக் குடித்ததனால் ஏற்பட்ட பாதிப்புதான் என்று உணர்ந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக மற்ற குழந்தைகள் கையில் வைத்திருந்த பால் டப்பாக்களை பிடுங்கி எறிந்தனர். மாணவ-மாணவிகள் யாரும் மில்க்ஷேக்கை குடிக்க வேண்டாம் என உடனடியாக அறிவித்தனர்.
மில்க்ஷேக் குடித்து பாதிக்கப்பட்ட 50 குழந்தைகள் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் வீடு திரும்பினர்.
பள்ளி குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட அந்த மில்க்ஷேக் 18.5.2014 ஆம் தேதி தயாரிக்கப்பட்டது. 6 மாதம் வரை (180 நாட்கள்) அதை பயன்படுத்தலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 17ஆம்தேதி வரை மட்டுமே அதை பயன்படுத்த முடியும்.
காலாவதியாக ஒருசில நாட்களே உள்ள நேரத்தில் குழந்தைகளுக்கு ‘மில்க் ஷேக்' வினியோகம் செய்யப்பட்டுள்ளது. அதில் உள்ள பால் கெட்டுப்போனதே குழந்தைகள் பாதிப்பிற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
நொறுக்குதீனி, குளிர்பானம் இலவசமாக கிடைத்து விட்டதே என்று அலட்சியமாக இருக்க கூடாது என்று பெற்றோர்கள் ஆவேசம் அடைந்தனர். சந்தோசமாக தொடங்கிய குழந்தைகள் தின விழாவில் கடைசியில் பரபரப்புடனும் சோகத்துடனும் முடிவடைந்தது.