உயிர்தியாகம், பெரும் போராட்டங்கள்.. 50 வருடங்கள் முன்பு அண்ணாவால் உதயமான 'தமிழ்நாடு'!
சென்னை: தமிழ்நாடு என சென்னை மாகாணம், அறிவிக்கப்பட்டதன் பின்னணியில் பெரும் போராட்டங்கள் நிறைந்த மெய் சிலிர்ப்பூட்டும் வரலாறு உள்ளது.
1956ஆம் ஆண்டு மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, ஹைதராபாத்தும் இதர பகுதிகளும் 'ஆந்திரப் பிரதேசம்' என்றும், திருவிதாங்கூரும் இதரப் பகுதிகளும் 'கேரளம்' என்றும் அழைக்கப்பட்டது.
ஆனால், மதராஸ் மாகாணம் என்பது தமிழ்நாடு என மாற்றப்படவில்லை. தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கோரி 1956ஆம் ஆண்டு 73 நாட்கள் பட்டினிப் போராட்டம் நடத்தி உயிர் தியாகம் செய்தார் சங்கரலிங்கனார். அக்கோரிக்கைக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்தவர் ம.பொ.சிவஞானம்.
போராட்டங்கள் தீவிரம்
போராட்டங்கள் வலுத்த நிலையில், 24.2.1961ம் ஆண்டு சட்டசபையில் சென்னை மாகாணம் இனிமேல் ஆங்கிலத்தில் "மெட்ராஸ் ஸ்டேட்" என்றும், தமிழில் "தமிழ்நாடு" என்றும் அழைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழிலும், ஆங்கிலத்திலும் ‘தமிழ்நாடு' என்று ஒரே பெயரில் மாற்றம் செய்வதற்கு சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி, அதனை அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தும்படி மத்திய அரசைக் கேட்க தவறியது அப்போதைய காங்கிரஸ் அரசு.
அண்ணா ஆட்சியில் அறிமுகம்
1967இல் அண்ணா ஆட்சிக்கு வந்த போது தான் தமிழர்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு என்பதை ஆங்கிலத்தில் எப்படி அழைக்க வேண்டும் என்பதில் அப்போது சிக்கல் எழுந்தது. தமிழ்நாட் (TAMIL NAD) என்று அழைக்க வேண்டும் என்று ராஜாஜி அறிக்கை வெளியிட்டார். ஆனால் அவரின் சீடராக அறியப்பட்ட ம.பொ.சி. இதனை மறுத்தார். "THAMIZH NADU" என்று தான் ஆங்கிலத்தில் அழைக்க வேண்டும் என்று திருத்தம் கோரினார். ஆனால் இதை அண்ணா மறுத்தார். வட இந்தியர்கள் ‘ழ' கர உச்சரிப்பை பிழையாக உச்சரித்துவிடுவார்கள் என்பது அண்ணாவின் அச்சம். எனவே "TAMIL NAD" என்று அழைப்போம் என்று அண்ணா கூறினார்.
ஒரு மனதாக ஆதரவு
ஆனால் இதிலும் சிக்கல் வந்தது. ம.பொ.சி. கூறுகையில், ‘உ' கர உச்சரிப்பை விட்டுக் கொடுக்க முடியாது. எனவே "TAMIL NADU" என்று தான் அழைக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறிவிட்டார். இதை அண்ணாவும் ஏற்று அதே பெயரை சூட்டுவதாக சட்டசபையில் அறிவித்தார். 1967ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி, தமிழக சட்டசபையில், தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யும் தீர்மானத்தை தாக்கல் செய்தார். காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளும் ஒரு மனதாக இதற்கு ஆதரவு தந்தன. இதனால் இந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம் செய்யப்பட்டு, இந்திய அரசியல் சாசனத்தில் தமிழ்நாடு என்ற பெயர் இடம் பெற்றது.
மெய் சிலிக்க வைத்த கோஷம்
தமிழ்நாடு என அண்ணா சட்டசபையில் கூற, உறுப்பினர்கள் 'வாழ்க' என உச்சஸ்தாபியில் கோஷமிட்டனர். இவ்வாறு மூன்று முறை, தமிழ்நாடு வாழ்க என்ற கோஷம் சட்டசபையில் எதிரொலித்தது. இந்த வாழ்த்து கோஷத்தை கேட்டபோது தனது உடம்பு சிலிர்த்துவிட்டது என்று நெகிழ்ந்தார் ம.பொ.சி. அப்படி தமிழர்களை மெய் சிலிக்க வைத்த தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டதன் பொன்விழாவை கொண்டாட தற்போதைய அரசு முடிவு செய்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று இதை சட்டசபை விதி எண் 110ன்கீழ் அறிவித்தார்.
தமிழ் எங்கள் உயிருக்கும் நேர்
மொழியை உயிரென நேசிப்பவர்கள் தமிழர்கள். அதை செயலிலும் செய்து காட்டிவிட்டனர். இந்தியாவில் மொழியின் பெயரால் ஒரு மாநிலம் அமைந்தது என்றால் அது தமிழ்நாடு மட்டுமே. மலையாளம் பேசும் மாநிலம், கேரளம்தான், கன்னடம் பேசும் மாநிலம், கர்நாடகம்தான். தெலுங்கு பேசும் மாநிலங்களோ, ஆந்திராதான். ஆனால் தமிழ் பேசும் மக்களை கொண்ட மாநிலம் தமிழ்நாடு என மொழியின் பெயரால் அமைந்தது. சமீபத்தில் உருவான தெலுங்கானா இந்த விஷயத்தில் தமிழகத்தின் பிரதிதான் என்பது குறிப்பிடத்தக்கது.