கொளுத்தப் போகும் கோடை.. சென்னை முழுவதும் 520 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்!
குடிநீர் தேவையை சமாளிக்க சென்னை குடிநீர் வாரியம் மூலம் 520 லாரிகளில் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
சென்னை: கோடை காலம் நெருங்குவதை முன்னிட்டு சென்னைவாசிகளின் குடிநீர் பஞ்சத்தை போக்க 520 லாரிகள் மூலம் குடிநீர் வழங்கும் பணியில் குடிநீர் வாரியம் ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பொய்த்துவிட்டது. இதனால வறட்சி ஏற்பட்டு பயிர்கள் கருகத் தொடங்கின. இதை கண்டு மனமுடைந்த தமிழக விவசாயிகள் 200-க்கும் மேற்பட்டோர் வாழ வழியின்றி தற்கொலை செய்து கொண்டனர்.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏரிகளின் நீர்மட்டங்களும் வெகுவாக குறைந்து வருகின்றன. சென்னைக்கு தேவையான குடிநீர் வழங்கும் ஏரிகள் நீரின்றி வறண்டு போனதால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
நீர்மட்டம் குறைந்தது
குடிநீர் வழங்கும் ஏரிகளான புழல், செம்பரம்பாக்கம், ரெட்டேரி உள்ளிட்ட ஏரிகளின் மூலம் சென்னை மக்களுக்கு இன்னும் எத்தனை நாளுக்கு தண்ணீர் விநியோகிக்க முடியும் என்று கணக்கிட்டு சொல்லும் அளவுக்கு அவற்றின் நீர்மட்டம் குறைந்துள்ளது.
நிலத்தடி நீர் இறங்கியது
மேலும் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்துள்ளதால் சென்னையில் குடிநீர் பஞ்சம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதைத் தடுக்க சென்னை குடிநீர் வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது.
லாரிகளில் குடிநீர்
வள்ளுவர் கோட்டம், மாத்தூர், கே.கே.நகர், எம்.ஆர்.சி.நகர், பள்ளிப்பட்டு, கொளத்தூர், கள்ளிக்குப்பம், ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி உள்பட 36 இடங்களில் இருந்து லாரிகள் மூலம் சென்னை மாநகராட்சிக்கு உள்பட 200 வார்டுகளுக்கு 520 லாரிகளில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
நாளொன்றுக்கு 6500 முறை
மேற்கண்ட இடங்களில் இருந்து நாளொன்றுக்கு 4, 200 முறை குடிநீர் எடுத்து செல்லப்பட்டு பொதுமக்களின் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வந்தது. தற்போது பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நாளொன்றுக்கு 6,500 முறை குடிநீர் எடுத்து செல்லப்பட்டு வருகிறது.
விவசாயக் கிணறுகளிலிருந்து
இதுதவிர சென்னையின் அண்டைய மாவட்டங்களிலிருந்தும் 300 விவசாய கிணறுகளில் இருந்தும் தண்ணீர் எடுக்கப்பட்டு குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான பெரிய தொட்டிகளில் சேர்த்து வைத்து பின்னர், அங்கிருந்து புழல் ஏரிக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
இப்பவே இப்படீன்னா
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே இத்தகைய நிலையென்றால், கோடை காலம் தொடங்கியதும் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் செய்வதறியாது சென்னை மக்கள் பீதியில் உள்ளனர்.