விழுப்புரம்- சரியாக வேலை பார்க்காத 53 சத்துணவு ஊழியர்கள் இடைநீக்கம்
விழுப்புரம்: விழுப்புரத்தில் தங்கள் பணியை ஒழுங்காக செய்யாத 53 சத்துணவு ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் சத்துணவு மையங்களை கண்காணிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சம்பத் தலைமையில் சத்துணவு மைய கண்காணிப்பு அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் அலுவலக அரங்கில் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில் உணவு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, இக்குழு மூலம் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்காலிக பணிநீக்கம்:
இக்குழுவினர் தொடர்ந்து அனைத்து சத்துணவு மையங்களை ஆய்வு செய்ததன் மூலம் அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காத காரணத்தால் இதுவரை 58 பணியாளர்களை தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
சுத்தமான சத்துணவு மையம்:
அனைத்து சத்துணவு மைய பொறுப்பாளர்களும் சத்துணவு மையங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். சத்துணவு மையத்தினை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.
சமையல் பொருட்கள் பாதுகாப்பு:
சத்துணவு மைய சமையல் பொருட்கள் வைக்கும் அறையில் விறகு கட்டைகளை குவித்து வைக்காமல், விறகு கட்டைகள் தனி இடத்தில் அடுக்கி வைத்து பல்லிகள் மற்றும் பூச்சிகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆள்மாறாட்டம் செய்யாதே:
சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் ஆள் மாறாட்ட பணியில் ஈடுபடக் கூடாது. ஆள்மாறாட்ட பணியில் ஈடுபடும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் மீது தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல் போலீஸ் நிலையத்தின் மூலம் குற்ற வழக்கு பதிவு செய்யப்படும்.
கடும் நடவடிக்கை:
மேற்கண்ட சுகாதார முறைகளை கடைபிடிக்காத சத்துணவு மைய பொறுப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.