இடார்சி தீ விபத்து: சென்னை வழியாக இயக்கப்படும் 58 வட மாநில ரயில்கள் ரத்து
சென்னை: மத்திய பிரதேச மாநிலம் இடார்சி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, சென்னை மற்றும் சென்னை வழியாக இயக்கப்படும் 58 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இடார்சி ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறை தீ விபத்தால், தொடர்ந்து ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருவதால், வடமாநிலங்களுக்குச் செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வட மாநில பயணிகளால் நிரம்பி வழிகிறது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு:
இன்று சென்னையிலிருந்து லக்னோவிற்கு இயக்கப்படவிருந்த விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் வரும் 17ம் தேதி புறப்படவுள்ள கோவை- ஜெய்ப்பூர் விரைவு ரயில், பாட்னா, பெங்களூரு விரைவு ரயில், கோரக்பூர், திருவனந்தபுரம் விரைவு ரயில், டெல்லி, சென்னை விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கன்னியாகுமரி - டெல்லி திருக்குறள் எக்ஸ்பிரஸ்; கன்னியாகுமரி - ஜம்முதாவி எக்ஸ்பிரஸ்; திருவனந்தபுரம் - டெல்லி கேரளா எக்ஸ்பிரஸ்; சென்னை, சென்ட்ரல் - டெல்லி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சனிக்கிழமை ரயில்கள்
ஜூலை 18 ம் தேதி சனிக்கிழமையன்று இயக்கட இருந்த 12616 டெல்லி - சென்னை சென்ட்ரல் ஜி.டி எக்ஸ்பிரஸ் ரயில், ஜம்முதாவி - சென்னை சென்ட்ரல் அந்தமான் ரயில், பெங்களூர் - பாட்னா சங்கமித்ரா ரயில், திருவனந்தபுரம் - இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட ரயில்களும்,19 ஞாயிறன்று புறப்படவுள்ள 10 ரயில்கள், 20ம் தேதி புறப்படவுள்ள 12 ரயில்கள், 21ம் தேதி புறப்படவுள்ள 11 ரயில்கள் என 58 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தீ விபத்திற்கு காரணம்
தீ விபத்து நடைபெற்று ஒரு மாத காலமாகிவிட்டது எனினும், இந்தக் கட்டுப்பாட்டு அறையில் நடந்த தீ விபத்தின் பின்னணி என்ன என்ற விவரம் மர்மமாகவே உள்ளது. மேலும், இதைப் போர்க்கால அடிப்படையில் சரி செய்யும் பணியை, ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளதா என்ற விவரமும் தெரியவில்லை.