பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா: பாதுகாப்புக்கு 6000 போலீசார் குவிப்பு
ராமநாதபுரம்: தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அக்டோபர் 30ம் தேதியன்று 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் வரும் 30ம் தேதி 108-வது ஜெயந்தி விழாவும், 53வது குரு பூஜை விழாவும் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி இன்று காலை தேவர் நினைவிடத்தில் பூஜைகள் தொடங்கப்பட்டன. ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து வந்தும், பொங்கல் வைத்து வழிப்பட்டனர்.
வரும் 30ம் தேதி தேவர் நினைவிடத்தில் அரசியல் கட்சிகள் தலைவர்கள் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்த வருகை தருவார்கள் என்பதால் வழக்கம் போல் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அக்டோபர் 31ம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு உள்ளதால் தேவர் குருபூஜை விழாவில் கலந்துகொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது.
பசும்பொன்னில் 4 இடங்களில் கன்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தடுக்க பசும்பொன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.