அடேங்கப்பா.. தமிழகத்தில் சமையல் காஸ் மானியம் விட்டுக்கொடுத்தார் எண்ணிக்கை 6.4 லட்சம்!
சென்னை: மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் சுமார் 6.4 லட்சம் பேர் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்துள்ளனர்.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் காஸ் சிலிண்டர்களை வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு சப்ளை செய்கின்றன.
வீடுகளுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களுக்கு, ஒரு வருடத்திற்கு அதிகபட்சமாக, 12 சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. அதற்கு மேல், எவ்வளவு சிலிண்டர்கள் வேண்டுமானாலும், மானியமில்லாமல் சந்தை விலையில் வாங்கிக் கொள்ளலாம்.
மானிய தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால், அதை குறைக்க விரும்பிய மத்திய அரசு, வசதி படைத்தவர்கள், காஸ் சிலிண்டர் மானியத்தை, தாங்களாக முன்வந்து விட்டுக் கொடுக்க முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்தது.
அதன்படி மேற்கண்ட எண்ணெய் நிறுவனங்களில் வாடிக்கையாளர்களாக உள்ள 16 கோடி பேரில், இதுவரை சுமார் 1 கோடி பேர் தங்களது மானியத்தை சரண்டர் செய்துள்ளனர். அதன் மூலம், அரசு ரூ.1,100 கோடி சேமித்துள்ளது.
இவ்வாண்டு ஏப்ரல் 20ம் தேதி வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, தமிழகத்தில் மட்டும் சுமார் 6.4 லட்சம் பேர் காஸ் மானியத்தை சரண்டர் செய்துள்ளனர். தென் மாநிலங்களில் கர்நாடகாவில் 6.9 லட்சம் பேர் சரண்டர் செய்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தை தமிழகம் பிடித்துள்ளது. இங்கு 6.4 லட்சம் பேர் சிலிண்டர் மானியத்தை விட்டுக்கொடுத்துள்ளனர்.
தமிழகத்துக்கு அடுத்தபடியாக தெலங்கானாவில் 3.4 லட்சம் பேரும், கேரளாவில் 2.8 லட்சம் பேரும், ஆந்திராவில் 2.3 லட்சம் பேரும் மானியங்களை திருப்பி கொடுத்துள்ளனர்.