அருப்பு கோட்டை: கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதலால் போலீஸ் குவிப்பு - 6 பேர் கைது
அருப்பு கோட்டை அருகே கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியி்ல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே உள்ள சின்ன கட்டன்குடியில் சக்தி விநாயகர் கோவில் உள்ளது. கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதல் ஏற்பட்டதால் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த கோவில் தொடர்பாக இரு பிரிவினர் இடையே முன் விரோதம் உள்ளது. இந்த சூழலில் ஒரு தரப்பைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவர் விஜயகுமார் கோவிலின் அருகே நின்று செல்போனில் பாட்டு கேட்டுள்ளார். அதனை அங்கு வந்த மற்றொரு தரப்பு மாணவன் குமார் கண்டிக்க, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இது மோதலாக மாறும் சூழலில், அந்த பகுதியில் நின்றவர்கள் இரு தரப்பினரையும் விலக்கி விட்டனர்.
இந்த சூழலில் இரவு 9.30 மணியளவில் குமார் தரப்பைச் சேர்ந்த சிலர், விஜயகுமார் தரப்பினர் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குச் சென்றனர். அவர்கள் திடீரென வீடுகளின் மீது கற்களை வீசி உள்ளனர்.
இதில் முருகேசன் என்பவரது வீடு உள்பட 5 பேரின் வீடுகள் பலத்த சேதம் அடைந்தன. இதுகுறித்து குருவம்மாள் என்பவர் அருப்புக்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி, குமார் தரப்பைச் சேர்ந்த 34 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதேபோல் எதிர்தரப்பை சேர்ந்த பெரியசாமி தாங்கள் தாக்கப்பட்டதாக ஒரு புகார் கொடுத்தார். அதன்பேரில் அன்பழகன் உள்பட 21 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், மாணவர்கள் கார்த்திக், கலைவண்ணன், கதிர்வேல், ராம்குமார், மற்றும் பெரியசாமி, குமரகுருபரன் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.