பெங்களூரு சிறையில் மட்டுமல்ல புழல் சிறையிலும் விதிமீறல்... எப்படி தெரியுமா?
புழல் சிறையில் விதியை மீறி பயன்படுத்திய 6 செல்போன் மற்றும் பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை : திருவள்ளூரை அடுத்த புழல் சிறையில் கைதிகள் பயன்படுத்தி வந்த 5 செல்போன் மற்றும் பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பெங்களூரு சிறையில் நடைபெறும் விதிமீறல்கள் காட்சிகள் கடந்த இரண்டு நாட்களாக பகீர் கிளப்பி வருகிறது. பணம் இருந்தால் சிறையிலும் நினைத்தபடி வாழலாம் என்பதை அந்தக் காட்சிகளும், புகைப்படங்களும் துகிலுரித்துக் காட்டின. இந்நிலையில் புழல் சிறையிலும் விதிமீறல்கள் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது, ஆனால் இந்த விதிமீறல்களைச் செய்தது சாதாரணக் கைதிகள் தான்.
ஜெயராமன் சிறைக் கண்காணிப்பாளர் ஜெயராமன் தலைமையில் புழல் சிறையில் திடீரென நேற்று இரவு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது கைதிகள் சிலர் செல்போன் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் விசாரணை நடத்திய போது மண்ணுக்குள் புதைக்கப்பட்ட மேலும் சில செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதே போன்று செல்போன் பேட்டரிகள் 4, 3 சிம்கார்டுகளும் கைதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து 100க்கும் மேற்பட்ட கைதிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்காணிப்புகளை மீறி சிறைக்குள் செல்போன் வந்தது எப்படி, கைதிகள் யாருடனெல்லாம் பேசினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து சிறை நிர்வாகம் புழல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் புழல் சிறையில் பாகிஸ்தான் கொடி வீசப்பட்டதையடுத்து பரபரப்பு கிளம்பியது, இந்நிலையில் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் சிறையில் இருந்து ஏதேனும் சதித்திட்டம் தீட்டப்படுகிறதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.