இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க 6 தேமுதிக எம்எல்ஏக்களுக்கு அனுமதி
சென்னை: இன்று தொடங்க உள்ள தமிழக சட்டசபையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க இடைநீக்கம் செய்யப்பட்ட 6 தேமுதிக எம்எல்ஏக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்த தேமுதிக எம்.எல்.ஏக்கள் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், வி.சி.சந்திரகுமார், கே.தினகரன், சி.எச்.சேகர், எஸ்.ஆர்.பார்த்திபன் மற்றும் எல்.வெங்கடேசன் ஆகிய 6 பேர், உரிமைக்குழுவின் பரிந்துரையின் பேரில், சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.
இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தமிழக சட்டசபையில் இருந்து தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனைத்தொடர்ந்து, உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகலுடன், தேமுதிக எம்.எல்.ஏக்கள் 6 பேர் நேற்று சட்டசபை செயலாளரை சந்தித்து மனு அளிக்க வந்தனர்.
அப்போது சட்டசபை செயலாளர் இல்லாததால், அவரது உதவியாளரிடம் மனுவை அளித்தனர். அந்த மனுவில் நாளை தொடங்கும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக கொறடா சந்திரகுமார், உரிமைக்குழு ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார். யார் தடுத்தாலும் சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே உச்சநீதிமன்ற உத்தரவின்படி இடைநீக்கம் செய்யப்பட்ட 6 தேமுதிக எம்.எல்ஏக்களும் கூட்டத் தொடரில் பங்கேற்க சட்டசபை செயலர் அனுமதி அளித்துள்ளார்.
இதனையடுத்து ஓராண்டுகளுக்குப் பிறகு சட்டசபை கூட்டத்தொடரில் 6 தேமுதிக எம்.எல்.ஏக்கள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.