பிஞ்சு குழந்தையை மது குடிக்க வைத்த தாய்மாமன் உட்பட 6 பேர் கும்பல் கைது!
திருவண்ணாமாலை: பிஞ்சு குழந்தைக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து குடிக்க வைத்த குடிகார கும்பலைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் ஒருவன் குழந்தையின் தாய் மாமன் எனவும் தெரியவந்துள்ளது.
திருவண்ணாமலை பகுதியில் பிஞ்சு குழந்தைக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து குடிக்குமாறு வற்புறுத்தி அதைப் பார்த்து ஒரு கும்பல் மகிழ்ந்துள்ளது. இந்த கொடூரம் ஒரு வீடியோ காட்சியாக சமூக வலைதளங்களில் பரவியது.
இக்கொடூரத்தில் ஈடுபட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து இந்த கும்பலைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
போலீசார் நடத்திய விசாரணையில் இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட 6 பேரும் திருவண்ணாமலை அருகே உள்ள மேல்சோழன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இதனையடுத்து இந்த 6 பேரையும் போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தாய் மாமன்
குழந்தையின் தந்தை சென்னையில் மேஸ்திரி வேலை பார்த்து வருகிறார். அக்குழந்தையின் தாய் மேல்சோழன் குப்பத்தில் வசித்து வருகிறார்.
இக்குழந்தையின் தாய்மாமனும் அவனது நண்பர்களும்தான் இந்த படுபாதக செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. தற்போது தாய்மாமனும் அவனது கூட்டாளிகள் 6 பேருமே போலீசிடம் சிக்கியுள்ளனர்.