6 அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் ஜெ. இல்லம்...நினைவிடமாக்கும் பணிகள் துரிதம்!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை, அரசு நினைவிடமாக்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். இதனையடுத்து அதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட
சென்னை: ஜெயலலிதா இல்லத்தை அரசு நினைவிடமாக்கும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் இல்லம் அமைந்துள்ள பகுதி, 6 அடுக்குப் பாதுகாப்பின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகளின் ஆய்வுப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜெயலலிதாவின் சென்னை போயஸ் கார்டனிலுள்ள வேதா நிலையம், அரசு நினைவிடமாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதையடுத்து வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்கும் பணிகள் நேற்றே தொடங்கி விட்டன.
மைலாப்பூர் தாசில்தார் சைலேந்தர் தலைமையில் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சியை சேர்ந்த 8 பேர் குழுவினர் நேற்று போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்றனர். அங்கு அளவெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். முதலில் போயஸ் கார்டனில் உள்ள இடத்தையும், வீட்டையும் அளவெடுத்து குறிப்பெடுத்துக்கொண்டனர்.
பின்னர் ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்களை வீட்டுக்குள் எந்தெந்த இடத்தில் வைப்பது, எந்த பொருட்களை காட்சிப் படுத்துவது, பொது மக்களை எந்த வழியாக அனுமதிப்பது, எந்த வழியாக வெளியேற வேண்டும் என்பது பற்றி ஆய்வு செய்து அதனையும் எழுதிக்கொண்டனர்.
ஜெயலலிதாவின் இல்லத்தில், 2 மணிநேரத்துக்கும் மேலாக அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இது குறித்து அறிக்கை தயார் செய்து, அதை அரசுக்கு விரைவில் அனுப்ப உள்ளனர்.
'பொதுமக்களுக்கான நினைவு இல்லம்'
நினைவு இல்லமாக்கும் பணி தொடங்கியதை தொடர்ந்து போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டு முன்பு வேதா நிலையம், போயஸ் கார்டனில் உள்ள மாண்புமிகு அம்மாவின் வீடு, பொதுமக்களுக்கான நினைவு இல்லம் என்று ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அதிகரிப்பு
போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதா வசித்த போது அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பின்னர்,ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அங்கு தனியார் செக்யூரிட்டி அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
6 அடுக்கு பாதுகாப்பு
போயஸ் கார்டனுக்கு நுழையும் ராதாகிருஷ்ணன் சாலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டுக்கு செல்ல திரும்பும் வழியிலும் சற்று தள்ளியும், முன்வாசல் அருகிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜெயலலிதா வீட்டின் பின்வாசலில் ஒரு அடுக்கும், கஸ்தூரி ரங்கன் சாலையில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் இருக்கிறார்கள்.
தீபா தீபக் எதிர்ப்பு
போயஸ்கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். சட்ட நிபுணர்களும் 'சட்டத்தில் இடமில்லை' என்று கருது தெரிவிக்கிறாரகள்.
நினைவிடமாக்குவதில் அரசு உறுதி
ஜெயலலிதாவின் இல்லம் நிச்சயம் நினைவிடமாக்கப்படும் என்று கூறும் தமிழக அரசின் முதல்வர் அலுவலக வட்டாரத்தினர், " நினைவிட பணிகளை துரிதப்படுத்தியுள்ளோம். தீபக் மற்றும் தீபா குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று கூறினர்.