சென்னையைக் கலக்கும் மகராஷ்டிரா திருடர்கள்.. பெண்களே தாலி, செயின் பத்திரம்!
சென்னை: சென்னயைில் ஆந்திரா திருடர்கள், வட மாநில திருடர்கள் கை வரிசை பழைய பேஷனாகி விட்டது. இப்போது மகாரஷ்டிராவைச் சேர்ந்த திருடர்கள் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளதாக காவல்துறை எச்சரித்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே இந்த சங்கிலிப் பறிப்புகள் அதிகரித்துள்ளனவாம். இந்த சங்கிலிப் பறிப்பில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு திருட்டுக் கும்பல் ஈடுபட்டுள்ளதாம். ஒரு குழுவாக இவர்கள் செயல்படுகிறார்களாம். வீட்டில் தனியாக இருக்கும் பெண்களைக் குறி வைத்தும், சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களைக் குறி வைத்தும் இவர்கள் திருடுகிறார்களாம்.
கடந்த ஒரே மாதத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் இவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இந்த மாதமும் இதை விட இரண்டு மடங்கு சம்பவங்கள் நடந்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.
நடித்துத் திருடுகிறார்கள்
அடையாறு, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், தேனாம்பேட்டை பகுதிகளில் ஐந்து பெண்களிடம் போலீஸார் போல நடித்து தங்கச் சங்கிலிகளைத் திருடியுள்ளது இக்கும்பல். கோமதி என்பவரிடம் மட்டும் 10 பவுனை கொள்ளையடித்துள்ளனர். சுகந்தா என்பவரிடம் 11 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துள்ளனர்.
மூதாட்டிகள் கவனம்
மூதாட்டிகள்தான் இவர்களின் எளிய இலக்காக உள்ளனர். மயிலாப்பூரில் 65 வயது மூதாட்டியிடம் 9 பவுன் தங்கச் சங்கிலியை இக்கும்பல் பறித்துச் சென்றுள்ளது. அதேபோல 72 வயதான லட்சுமி என்ற மூதாட்டியிடமும் இவர்கள் நகை பறித்துச் சென்றனர்.
புனே "சூப்பர்" திருடர்கள்!
இந்தத் திருடர்கள் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. குழுவாக சென்னையில் முகாமிட்டுள்ளனர். மொத்தம் 6 பேர் உள்ளதாக தெரிய வந்துள்ளது புனேதான். இவர்களது சொந்த ஊராகும். இவர்கள் ஏற்கனவே 3 வருடத்திற்கு முன்பு சிக்கி கைதாகி சிறைக்குப் போனவர்கள். தற்போது வெளியே வந்த பின்னர் மீண்டும் திருட்டில் குதித்துள்ளனர்.
களம் இறங்கிய கமிஷனர்
இந்தக் கும்பலைப் பிடிக்க தற்போது போலீஸார் தீவிர நடவடிக்கைகளில் குதித்துள்ளனர். சென்னை போலீஸ் கமிஷனரே நேரடியாக இந்தப் பணியை மேற்பார்வையிட்டு வருகிறார். 6 பேரும் பழைய குற்றவாளிகள் என்பதால் அவர்களின் புகைப்படங்களை வாட்ஸ் ஆப் மூலமாக போலீஸாருக்கு அனுப்பி தீவிரமாக தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
பெண்களே உஷார்
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில் இன்னும் ஓரிரு நாளில் இக்கும்பலை மொத்தமாகப் பிடித்து விடுவோம். பெண்கள் குறிப்பாக மூதாட்டிகள், வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். யாராவது அட்ரஸ் கேட்பது போல அணுகினால் உஷாராக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். வெளியில் தனியாக செல்லும் மூதாட்டிகள் அதிக அளவில் நகைகள் அணிந்து செல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்வதாக அவர்கள் கூறினர்.