அமைச்சர் அலுவலகத்தில் வெடிகுண்டு வீசியதற்கு உட்கட்சி பூசல் காரணமா?- 6 பேரிடம் தீவிர விசாரணை
மதுரை: மதுரையில் அமைச்சர் செல்லூர் கே ராஜூ அலுவலகங்களில் வெடிகுண்டு வீசப்பட்டது தொடர்பாக 6 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த ஆறு பேரும் அதிமுகவைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.
உட்கட்சி பூசல் காரணமாக வெடிகுண்டு வீச்சு நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் அவர்கள் 6 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
செல்லூர் ராஜூவின் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் சம்பட்டிபுரத்திலும், கட்சி அலுவலகம் பனகல் சாலையிலும் உள்ளது. நேற்று முன் தினம் நள்ளிரவு 12 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் அலுவலகம் மீது முதலில் ஒரு நாட்டு வெடிகுண்டை வீசியதாகவும், அது வெடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இரண்டாவதாக வீசப்பட்ட நாட்டு வெடிகுண்டு வெடித்ததில், அலுவலக கதவு, ஜன்னல்கள் சேதமடைந்தன.
அதேநேரத்தில் பனகல் சாலையில் உள்ள கட்சி அலுவலகம் மீதும் ஒரு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில், மின் விளக்குகள் சேதமடைந்தது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த மதுரை மாநகர காவல் ஆணையர் சைலேஷ் குமார் யாதவ் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு தடுப்பு காவல்துறையினர், மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர்.
அதனையடுத்து, இவ்விவகாரத்தில் 6 பேரின் மீது சந்தேகம் கொண்ட போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.