போலி ஆவணம் தயாரித்து நில மோசடி.. பெண் உள்பட 6 பேர் அதிரடி கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே போலி ஆவணம் தயாரித்து நிலம் மோசடி செய்த பெண் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே கீழசெக்காரக்குடி பெருமாள்கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் அங்கு ஓட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான 87 சென்ட் நிலத்தில் 25 சென்ட் இடத்தை தூத்துக்குடி போல்பேட்டை ராஜேந்திரன், சென்னை மாணிக்கம் மனைவி மாலையம்மாள் ஆகியோருக்கு பவர் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் அந்த இடத்தை போலி ஆவணம் தயாரித்து வேறு நபருக்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது. இது ராமசாமிக்கு தெரியவரவே அவர் தூத்துக்குடி எஸ்பி அஸ்வின்கோட்னீஸ்சிடம் மனு அளித்தார். அவர் தட்டப்பாறை போலீசார் விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி விசாரணை நடத்தி ராஜேந்திரன், அவரது மனைவி செல்லக்கனி, மாலையம்மாள், கீழசெக்காரக்குடி முனியாண்டி, அவரது மகன் பிச்சையா, கொம்புக்காரநத்தம் கண்ணன் மகன் ரகுபதி ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தார்.
மேலும் இவர்கள் இது போன்ற வேறு எங்காவது, யாரிடமாவது இது போன்ற ஏமாற்று வேலை செய்து நிலம் விற்பனை செய்துள்ளார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பொதுமக்கள் மத்தியில் நிலம் பவர் கொடுப்பதற்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.