இன்னும் எத்தனை அசம்பாவிதம் நடக்க வேண்டும்.. இந்த சாணி பவுடரை தடை செய்ய?
ரசாயன பவுடரை தெரியாமல் கரைத்து மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
திருப்பூர்: சர்பத் பவுடர் என நினைத்து சாணி பவுடரை கரைத்து மாணவர்கள் கரைத்து குடித்துவிட்டனர். இந்த விபரீதம் காரணமாக 6 மாணவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் கே.வி.ஆர் நகர் என்ற இடத்தில் தனியார் மேல்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் வழக்கம்போல் காலை பள்ளியில் வகுப்புகள் தொடங்கி நடந்து வந்தது.
அப்போது, 12 -ஆம் வகுப்பு ஒன்றில் மாணவர்கள் அனைவரும் தன் வகுப்பு ஆசிரியருக்காக காத்திருந்தனர். அப்போது மாணவன் ஒருவனின் புத்தக பையில் காகிதத்தால் சுற்றப்பட்ட பொட்டலம் ஒன்று இருந்தது. அதனை மாணவனுடன் இருந்த நண்பர்கள் பார்த்துவிட்டனர். அத்துடன் அந்த பொட்டலத்தை எடுத்து, பிரித்து பார்த்தபோது பவுடர் போல இருந்தது. அதனை சர்பத் பவுடர் என நினைத்து, தண்ணீரில் கலந்து நண்பர்கள் 6 பேர் குடித்தனர்.
குடித்த சிறிது நேரத்தில் அனைவரும் வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்தனர். அந்நேரம் பார்த்து வகுப்பு ஆசிரியர் உள்ளே நுழைந்ததும், மாணவர்களின் கையில் காகித பொட்டலம் இருந்ததை கண்டும், மாணவர்கள் மயங்கி விழுந்து கிடப்பதை கண்டும் அதிர்ச்சியடைந்து உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் தகவல் அளித்தார். இதனையடுத்து அந்த மாணவர்கள் 6 பேரையும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தற்போது சிகிச்சையளித்து வருகின்றனர்.
பின்னர் சம்பவம் குறித்து தகவலறிந்த திருப்பூர் மத்திய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், மாணவர்கள் ரசாயனம் கலந்த சாணி பவுடர் என தெரியவந்தது. எனினும், பள்ளி மாணவனின் பையில் சாணிப்பவுடர் ஏன் வந்தது? வேறு ஏதேனும் பிரச்சனைக்காக மாணவர்கள் வேண்டுமென்றே சாணி பவுடரை வாங்கி வந்து கரைத்து குடித்தார்களா? என்பன குறித்து தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.