ஆசிரியரை கீழே தள்ளி விட்டு கேலி கிண்டல் செய்த 6 மாணவர்கள்.. அத்தனை பேரும் அதிரடி சஸ்பெண்ட்
ஆசிரியரை கேலி செய்த 6 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர்: வாத்தியாரை கீழே தள்ளி விட்டு கேலி செய்து, டான்ஸ் ஆடும் மாணவர்களை எங்காவது பார்த்திருக்கிறோமோ? இந்த கூத்தெல்லாம் நம்ம ஊரில்தான் நடக்கும்!!
திருப்பத்தூரில் ராமகிருஷ்ணா அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
பிளஸ் 2 மாணவர்கள் சிலர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தன் வகுப்பு ஆசிரியரை கேலி செய்து அதை வீடியோவாக பதிவு செய்து இணையத்திலும் வெளியிட்டிருந்தனர்.
டான்ஸ் ஆடுகிறார்
நான்கைந்து காட்சிகளாக அந்த வீடியோ உள்ளது. ஒரு கிளாசில் வகுப்பாசிரியர் நின்று கொண்டிருக்கிறார். அப்போது கையில் புத்தகத்தை சுழட்டி கொண்டு கிளாஸ் ரூமுக்குள் நுழைகிறார்கள் சில மாணவர்கள். ஒருவர் டான்ஸ் ஆடுகிறார், இன்னொருவர் டேபிள், சேர்களை பிடித்து இழுக்கிறார். பிறகு ஆசிரியரை கீழே தள்ளி விட்டு கேலி செய்கிறார்.
வைரலான வீடியோ
ஒரு மாணவனும் யூனிபார்ம் பட்டனை கூட போடவில்லை. அப்படியே அவிழ்த்துவிட்டு கொண்டு திரிகிறார்கள். உயிருக்கு பயந்து அந்த ஆசிரியரும் எந்தவித எதிர்ப்பையும் காட்டவில்லை, இது சம்பந்தமாக யாரிடமும் இதுவரை சொல்லவும் இல்லை. இந்த வீடியோவை மாணவர்கள் கெத்து காட்டுகிறோம் என்ற பெயரில் வெளியிட, அது வைரலாகி, பெற்றவர்கள், பொதுமக்கள் என எல்லார் வயிற்றிலும் புளியை கரைத்துவிட்டது.
கல்வி அலுவலர்கள்
கடைசியில் இது சம்பந்தமாக உடனடியாக விசாரணை நடத்தும்படி கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டார். அதன்பேரில் திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலர் சிவா மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவர்கள் ஆசிரியரை இப்படி ஒழுங்கற்ற முறையில் நடத்தியது உண்மைதான் என தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து பேசினர்.
அவதூறு
அப்போதுதான் மற்றொரு உண்மை தெரியவந்து அனைவருக்கும் அதிர்ச்சியை அதிகப்படுத்தியது. ஏனெனில் போன வருஷம் அந்த பள்ளி தலைமை ஆசிரியர் பாபுவை கத்தியால் குத்திய மாணவர்கள்தான் திரும்பவும் அதே பள்ளியில் சேர்ந்து ரகளையில் ஈடுபட்டு ஆசிரியர்களை தொடர்ந்து கேலி, கிண்டல், அவதூறு செய்து வந்தது தெரியவந்தது.
6 பேரும் சஸ்பெண்ட்
வீடியோவில் இருந்த 6 மாணவர்களும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டு, பிறகு இங்குவந்து பிளஸ் 2 படித்து கொண்டிருக்கிறார்கள். இதையடுத்து 6 மாணவர்களை பள்ளியிலிருந்து சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
குமுறும் மக்கள்
என்னதான் சஸ்பெண்ட் செய்தாலும், மக்களுக்கு இன்னும் கோபம் குறையவில்லை. சீர்திருத்த பள்ளிக்கு போய் அங்கு பட்டும் திருந்தாமல், இன்னமும் அடங்காமல் இப்படி அட்டகாசம் செய்த மாணவர்களை டிஸ்மிஸ் செய்தால்கூட தப்பில்லை என்று மக்கள் குமுறுகிறார்கள்.