அடிக்கடி பழுதாகும் ஸ்டான்லி மருத்துவமனை லிப்ட்.. இன்று 6 பேர் சிக்கி தவிப்பு!
சென்னை: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அடிக்கடி லிப்ட் பழுதாகி நோயாளிகளை சிரமப்படுத்தி வருகிறது. இன்று 6 பேர் சிக்கி தவித்தனர்.
ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் புதிதாக 5 மாடி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அதில் இதய சிகிச்சை பிரிவு, சிறுநீரக சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மாடியில் சிகிச்சை பெறுபவர்களை பார்க்க 6 பேர் நேற்று இரவு லிப்டில் சென்றனர். அப்போது முதல் மாடிக்கு செல்லும் வழியிலேயே லிப்ட் பழுதாகி நின்றுவிட்டது. இதனால் நோயாளிகளின் உறவினர்கள் பதற்றம் அடைந்தனர். 30 நிமிட போராட்டத்துக்கு பிறகு லிப்ட் மீண்டும் இயங்கியது.
இதுபோன்று இந்த லிப்ட் அவ்வப்போது பழுதாகி வருகிறது. ஊழியர்கள் இதை உரிய முறையில் பராமரிக்காததால் இதுபோன்ற நிலை ஏற்படுவதாக புகார் கூறப்படுகிறது.