பெண்ணாடம் அருகே 6 வயது சிறுமியை சீரழித்த பட்டதாரி இளைஞர் கைது
6 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
பெண்ணாடம்: விளையாடி கொண்டிருந்த 6 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பெண்ணாடம் அருகே நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக பட்டதாரி இளைஞர் ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
பெண்ணாடம் அருகே உள்ள கிராமம் பெரியகொசப்பள்ளம். இங்கு வசித்து வரும் குமரேசன் என்பவர் ஒரு நகைக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 6 வயது சிறுமியை குமரேசன் தூக்கி சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இது பற்றி அந்த சிறுமி தனது பெற்றோரிடம் அழுதபடியே தெரிவித்துள்ளாள். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக பெண்ணாடம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் குமரேசனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்படுகிறது. படித்த பட்டதாரியான குமரேசனுக்கு திருமணமாகி, 2 மாத கைக்குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.