திருக்குறளை தலைகீழாக எழுதி அசத்தும் கோவை ஜனனி.. வயசு 6 தான்!
கோவை: கோவையில் திருக்குறளை தலைகீழாக எழுதும் 2 ஆம் வகுப்பு பள்ளிச் சிறுமியை கோவை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் புதன்கிழமை பாராட்டினார்.
கோவை, போத்தனூர் செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். சரக்கு வேன் ஓட்டுநர். இவரது மனைவி நந்தினி. இவர்களது மகள் ஜனனி. ஆறு வயதான இவர் மதுக்கரை ஊராட்சி தொடக்கப் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படிக்கிறார்.
கடந்த சில நாள்களாக தாயார் நந்தினி, மகள் ஜனனியின் நடவடிக்கைகளைக் கவனித்தபோது, அவர் திருக்குறள்களை எழுதுவதில் ஆர்வமாக இருப்பது தெரியவந்தது. நாளடைவில் திருக்குறளை தலைகீழாக எழுதத் தொடங்கினார். தற்போது 1,330 குறள்களையும் தலைகீழாக எழுதுகிறார்.
இதுகுறித்து தகவலறிந்த "காதி கிராஃப்ட்" நிறுவனத்தார் அச் சிறுமியை நேரில் அழைத்து திருக்குறள்களை எழுதுமாறு கூறியுள்ளனர். 21.5 மீட்டர் கதர்த் துணியில் 2 மாதத்தில் அனைத்துக் குறள்களையும் இச் சிறுமி எழுதினார்.
இந்நிலையில் ஜனனி தனது பெற்றோருடன் மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை புதன்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
முன்னதாக, காவல் ஆணையரிடம் சில திருக்குறள்களை ஜனனி தலைகீழாக எழுதிக் காட்டினார்.
இதைத் தொடர்ந்து அனைத்து திருக்குறள்களையும் தலைகீழாக ஜனனி எழுதிய 21.5 மீட்டர் கதர்த் துணி காவல் ஆணையரின் பார்வைக்கு வழங்கப்பட்டது.
இதைப் பார்வையிட்ட காவல் ஆணையர், ஜனனியைப் பாராட்டினார். மாநகர ஊர்க்காவல் படையினர் சார்பில் சிறுமிக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.